செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயில்வே ஊழியர்களை முற்றுகையிட்டு பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வரும் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று சரியாக 7.30 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்தது. திங்கட்கிழமை என்றால் இந்த ரயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்டவர்கள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு இந்த ரயிலில் சென்று வருகின்றனர்.
காலை 7.30 மணிக்கு ரயில் என்பதால், கல்லூரி செல்பவர்கள் மருத்துவமனைக்கு பணிக்கு செல்பவர்களுக்கும் இந்த ரயில் ஏதுவாக இருந்தது. ஆனால் சில மாதங்களாகவே கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் டிக்கெட் வழங்காமல் நிறுத்தியதால் தங்களுடைய பணிகளுக்குச் செல்ல காலதாமதம் ஏற்படுவதாகப் பயணிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக ரயிலானது நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பயணிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.