நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதேசமயம் விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தனர்.
இதனையடுத்து விஜயகாந்த் பூரண குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். அதில் ‘மருத்துவ பரிசோதனையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் அண்ணன் விஜயகாந்த்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.