Skip to main content

ஒட்டுமொத்த மாணவர்களையும் கலங்க வைத்த ஆசிரியரின் மரணம்!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
passed away of the teacher who disturbed all the students

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மதி. பிரபாகரன் (வயது 40). ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளிகளில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாகி போட்டித் தேர்வை எதிர்கொண்டு சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்ற பிறகு தனது பாடத்தில் கவனம் செலுத்துவதுடன், தனது வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள அத்தனை மாணவர்களிடமும் பாசமாக இருந்துள்ளார். பள்ளி நிர்வாகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து பள்ளி மட்டுமின்றி பள்ளிக்கு வெளியே பெற்றோர்களிடமும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சில நாட்களாக சோல்டர் வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்று வந்தவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென வயிற்றுவலியும் ஏற்பட கீரமங்கலத்தில் ஒரு தனியார் கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை பெற்று அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றவருக்கு நாடித் துடிப்புகள் குறையத் தொடங்கி இருந்தது. அறந்தாங்கியில் அவசரச் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருச்சி கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

passed away of the teacher who disturbed all the students

அதிகாலையில் ஒரு இளம் ஆசிரியரின் மரணச் செய்தி கேட்டு ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலங்கிப் போனார்கள். உயிரிழந்த ஆசிரியரின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரும் முன்பே கலங்கிய கண்ணீரோடும், கைகளில் மாலையோடும் காத்திருந்தனர் மாணவர்கள். “எல்லாருகிட்டயும் அன்பை கொட்டி பேசுவீங்ளே சார், எல்லாரும் நல்லா படிச்சு என்னைப் போல போட்டித் தேர்வுல பாசாகி வேலைக்கு வரணும். அதுக்கு போட்டித் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளணும் என்று சொல்லிக் கொடுத்தீங்க... இனி யாரு சார் சொல்லிக் கொடுப்பாங்க...” என்று கதறி அழுத மாணவர்களைத் தேற்றினர். பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு உதவிகள் செய்ததோட வெளியிலயும் நட்பா பழகுவார் எங்க சார் என்றனர்.

இதே போல சக ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிரபாகரன் இழப்பை ஏற்க முடியல என்றனர். சமீப காலமாக நல்ல மருத்துவர்களை, நல்ல மாணவர்களை, நல்ல விளையாட்டு மாணவர்களை இழந்து வந்த நாம் நல்ல ஆசிரியரையும் இழந்துவிட்டோம் என்று கதறினர் சில இளைஞர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.