ADVERTISEMENT

பார்த்திபன், லதா ரஜினிகாந்த் புகார் - உள்துறை, சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

07:29 PM Aug 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


சென்னை வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெற்றோருடன் சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தை ரோஷன் கடந்த 2016 பிப்ரவரி 23ஆம் தேதியும், 9 மாத குழந்தை சரண்யா மார்ச் 28ஆம் தேதியும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.


அவர்களை மீட்க வேண்டுமென நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா நிர்மல், லதா ரஜினிகாந்த் ஆகியோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்குகளை அப்போது விசாரித்த நீதிபதிகள் எஸ். நாகமுத்து, வி.பாரதிதாசன் குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தத போது "குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், மற்ற வழக்குகளை போல அல்லாமல், இந்த வழக்கிற்கு அதீத முக்கியத்துவத்தை அரசு வழங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை எனவும், நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் அரசே முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறியுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.


அப்போது நீதிபதிகள், இங்கே உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, இறந்தபிறகு மட்டுமே பாதுகாப்பு கிடைக்கிறது. 100க்கும் மேற்பட்ட தமிழக குழந்தைகள் விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நோக்கம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது; இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், செப்டம்பர் 24ஆம் தேதியன்று குழந்தை கடத்தல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT