Skip to main content

பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்! - யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம்!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
as


புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்த ஏற்பாடு நடப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேர்தலை பற்றியும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாக்காளராக தகுதி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கான தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டது. புதுச்சேரி தேர்தல் துறையின் இப்புதிய அமைப்பின் தொடக்க நிகழ்வு அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, தேர்தல் கல்விக்குழு அமைப்பை தொடங்கி வைத்து தேர்தல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், நேர்மையாக வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி கந்தவேலு, "புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்கியிருப்பதாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பேட் என்ற இயந்திரத்தை இந்த தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் லூர்துசாமி, உதவி தேர்தல் அதிகாரி தில்லைவேல் உள்ளிட்ட தேர்தல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.