சென்னை குன்றத்தூரில் பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாத மகன், தாய் தந்தை முன்னே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை குன்றத்தூர் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மாலகிருஷ்ணன் எனும் மகன் உள்ள நிலையில் பெற்றோரின் இந்த சண்டை சிறுவனை மனமுடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் பிரபாகரன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவருடைய மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
மனமுடைந்த சிறுவன் மாலகிருஷ்ணன் தந்தையின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி அவருடைய மார்பில் குத்திக் கொண்டு துடிதுடித்து கீழே விழுந்துள்ளான். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவன் மாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இது தொடர்பாக பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதில் மகன் மனமுடைந்து கத்தியால் குத்திக்கொண்டு இறந்த சம்பவம் சென்னை குன்றத்தூரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.