Skip to main content

நாட்டு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன்? - பெற்றோர் புகார்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Parents complain passed away boy who consumed local medicine

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் 10 வயது ரோகித் தைலாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக திடீரென சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. உடனடியாக சிறுவனின் பெற்றோர் கடந்த 19 ஆம் தேதி விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் காந்திமதி என்பவரிடம் நாட்டு மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.

 

காலை 8 மணிக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை புதுச்சேரி கதிர்காமம் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். அன்றிரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

 

இதனிடையே, நாட்டு மருந்து சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்திருப்பதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல் நிலையத்தில் சிறுவனது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் நிலை உள்ளது. கெங்கராம்பாளையம் பகுதியில் உள்ள நாட்டு மருத்துவரிடம் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு சென்று நாட்டு மருந்து சாப்பிட்டு குணமாகி உள்ளனர். மேலும் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் சிகிச்சை எடுத்ததினால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்திருக்கலாம், நாட்டு மருந்து சாப்பிட்டதால் இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.