Skip to main content

விஐபி-க்கு மிரட்டல் ஆடியோ! கண்டுகொள்ளாத காவல்துறை..!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Paramakudi sagayam audio video


"என்னை செய்யுறதக்கு வேற யார்றா இருக்கா..?" என தனக்குத் தெரிந்த முக்கிய நபர்களின் பெயரினை துணையாகக் கொண்டு குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுக்கின்றது ஒரு ஆடியோ. அதற்குத் துணையாக சம்பந்தப்பட்ட நபர் திருநெல்வேலி அரிவாளை சுழற்றும் வீடியோ என இரண்டுமாக வாட்ஸ் அப் செய்தியாக பரமக்குடி நகரில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றது .

 

வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கும் அந்த ஆடியோ மற்றும் வீடியோவிற்கு சொந்தக்காரர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள முத்துசரளாபுரத்தைச் சேர்ந்த சகாயம் என்பவர். 2019 காலகட்டங்களில் மாநில கலை, கலாச்சாரப் பிரிவின் இணை செயலாளராக பாஜகவில் பதவி வகித்து பணியாற்றிய சகாயம், பரமக்குடி ஓட்டைப்பாலம் அருகில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். 2019க்கு முன்பு வரை அமெரிக்காவில் ஐ.டி. ஆர்கிடெக்காக பணியாற்றிய நிலையில், பரமக்குடியில் வசிக்கும் தன்னுடைய உறவினரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி., அருளானந்துடன் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றது.

 

நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், எஸ்.எம்.டி., அருளானந்த், "தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் சகாயம்" என பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

இதே வேளையில் மாணிக்கம் என்பவரும் சகாயம் மீது ஆட்கடத்தல் புகாரளித்த நிலையில், 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய வேளையில் சென்னை விமான நிலையத்திலேயே சகாயம் கைது செய்யப்பட்டு முதுகுளத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

இடையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி காண்பித்து மிரட்டியதாக செய்திகளும் வெளியாகியது. இவ்வேளையில், திமுக விஐபி-யின் குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடும் நோக்கில் வெளியிடப்பட்ட ஆடியோவும், வீடியோவும் இன்று வைரலாக பரவி வருகின்றன.

 

இதுகுறித்து ஆடியோ, வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் சகாயத்தினைத் தொடர்புக் கொண்டோம், "எனக்கும் எஸ்.எம்.டி.க்கும் பிரச்சனை இருந்தது உண்மை. என்னை பண விவகாரத்தில் ஏமாற்றி விட்டார். ஏமாற்றிய கோபத்தில் அவரைப் பற்றி முகநூலில் பதிவிட்டது மட்டுமே உண்மை. மற்றையபடி இந்த ஆடியோவிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அது என்னுடைய வாய்ஸே இல்லை. வீடியோவில் இருப்பது நான்தான். அது அட்டைக் கத்தி! திரைப்படத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்தேன்" என குற்றச்சாட்டினை மறுத்தார் அவர். 

 

கொலை மிரட்டல் ஆடியோ, வீடியோ என்பது ஒரு புறமிருப்பினும் காவல்துறையினரின் வளையத்திலுள்ள அந்த முக்கிய நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கதிகலங்கியுள்ளனர் பரமக்குடி வாசிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

governor rn ravi pay tribute to thiyagi immanuvel sekaran at paramakudi

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக (ஏப்ரல் 18 மற்றும் 19) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

 

ஆளுநரின் சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று (18.04.2023) மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். மேலும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் பார்த்து ரசித்தார்.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துப் பேசினார். அப்போது ஒரு மாணவர் ‘‘முன்பு நீங்கள் காவல்துறை உளவுப்பிரிவில் இருந்தீர்கள். இப்போது ஆளுநர் பதவியில் இருக்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள். இதில் எது உங்களுக்கு மனநிறைவைத் தருகிறது’’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், ‘‘நான் வகிக்கும் பதவி எப்போது எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறதோ... அப்போது என் பணியிலிருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (19.04.203) ஆளுநர் ஆர்.என்.ரவி பரமக்குடியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

 

 

Next Story

“ஸ்கூல் யூனிபார்மோட கூட்டிட்டு போவாங்க...” - சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிமுக கவுன்சிலர்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Pramakudi child issue five arrested include admk member

 

"சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?' என தன்னுடைய ஆதங்கத்தை பாலியல் புரோக்கரான பெண்மணி ஒருவர், இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்திருக்கின்றார். இது ஆடியோவாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸாருக்கு செல்ல, ஆடியோவின் நூல்பிடித்து பரமக்குடியில் உள்ள வி.ஐ.பி.க்களை அதிரடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை.

 

பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி, மறத்தமிழர் சேனை எனும் அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் ராஜாமுகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கட்டாயப்படுத்தி, சிறுமியுடன் பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதற்கு உதவியாக புரோக்கராகச் செயல்பட்ட புதுநகர் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து நபர்களும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தாரால் குற்ற எண்: 05/23, 363, 366 (A), 376 (3) IPC and 5(1), r/w 6,16 r/w 17 of Pocso act-ன் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

 

th

 

சிறுமி விவகாரத்தில் போலீஸாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவிக்க, "சிக்கியது இவர்கள் மட்டுமே! சிக்காத பல வி.வி.ஐ.பி.க்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களையும் கைதுசெய்து இது போல் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளைக் காப்பாற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.


வெளிநாட்டிற்கு பெண்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள் என சகஜமாக ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், “ஏம்பா! இந்த புதுமலர் பிரபாகரன் இருக்கான்லே! சின்ன புள்ளைதான் வேணும்னு அடம்பிடிச்சு அன்னைக்கு அந்த புள்ளையை கூட்டிட்டு பார்த்திபனூரிலிருந்து மானாமதுரை போகும் பாதையில் இருக்கின்ற அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போனான். வேலையை முடிச்சதும் பணத்தைத் தரல! இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? ஒரு பெரிய மனுசனுக்கு இதெல்லாம் அழகா?” என தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கயல்விழி இன்னொருவரிடம் பேசிய ஆடியோ தான் எங்களுக்குத் துருப்புச் சீட்டாக மாறியது. அதனைக் கொண்டு சி.டி.ஆர். போட்டுப்பார்க்கையில் ஊரிலுள்ள அத்தனை வி.ஐ.பி.க்களும் கயல்விழியோடு தொடர்பிலிருப்பது தெரியவந்தது.


கயல்விழியை போலீஸ் காவலில் விசாரிக்கையில் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருடைய இலக்கு வறுமையில் வாடும் நிறமான 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே! இதற்காக தன்னுடைய கூட்டாளியான அன்னலட்சுமியை துணைக்குக் கொண்டு அவருடைய சமூகத்து ஆட்களிடம் நெருக்கமாகப் பழகி அங்குள்ள சிறுமிகளை அவ்வப்போது திருவிழா, பொருட்காட்சி, கோவில், சினிமா என உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

Pramakudi child issue five arrested include admk member

 

சிறுமிகளுடன் திரியும் கயல்விழியை அணுகும் பெரிய மனிதர்கள் ரேட் பேசி விடுவார்கள். வாடிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு பத்து ஆயிரம் என கணக்கிட்டு வாங்கும் கயல்விழி, சிறுமிகளுடன் நைச்சியமாக பேசுவார். இதில் கிடைக்கும் பணம் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கும் என்கின்ற நம்பிக்கையிலும், ஏற்கனவே நம்மை அழைத்துக் கொண்டு நிறைய செலவு செய்திருக்கும் கயல்விழிக்கு பிரதி உபகாரமாகவும், தவறு எனத் தெரியாமலும் சிறுமிகள் சம்மதித்த நிலையில், அந்த பெரிய மனிதர்களுக்கு சிறுமிகளை சப்ளை செய்வார் கயல்விழி. இப்படித்தான் இதே ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி இந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றாள் என்றார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

 

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியோ தான் படித்துக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு கடந்த 2022, டிசம்பர் 26 தொடங்கி 2023, பிப்ரவரி 21 வரை மூன்று மாதங்களாகச் செல்லவில்லை என்பது போலீஸாரின் விசாரணையில் தெளிவானது. "கஷ்டப்படுற குடும்பம்! எனக்கு அன்னலட்சுமி என்ற உமா அக்கா சொந்தக்காரங்க. புது நகரில் இருக்கின்ற ஏந சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ் வேலை பார்த்து வந்தாங்க. அவங்க மூலமாகத்தான் அது போல் அங்க ஏற்கனவே வேலை பார்த்துவந்த கயல்விழி அக்காவும் பழக்கமானாங்க. எங்கே வெளியில் போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. செலவும் நல்லா செய்வாங்க. ஒரு நாள் என்னிடம், என்னுடைய சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களை பார்த்துக்கிட்டன்னா கைநிறைய பணம் கிடைக்கும். வீட்டு பிரச்சனையும் தீரும் என ஆசை காட்டி ஸ்கூல் யூனிபார்மோடு பார்த்திபனூர் பக்கமிருக்கின்ற மஹாலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஏற்கனவே அந்த அக்காவோட முதலாளி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி இருந்தாரு. தெரிஞ்ச முகம்தானே என நினைக்கையில் அந்த சம்பவம் நடந்துச்சு.. எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர் நடந்துகொண்டார். அதன்பின் அவரோட ப்ரண்டான களஞ்சியம் ரெடிமேட் ராஜாமுகமது என தொடர்ச்சியாக வந்தாங்க. நாளடைவில் நான் வேண்டாமென்றாலும் இரு அக்காக்களும் சேர்ந்து வற்புறுத்தி என்னைய அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. போகலைன்னா அடிதான். வலி பொறுக்கமுடியாமல், அரை மயக்கத்திலே எல்லாம் நடக்கும். அடச்சீய் இந்த மனுசனா..? என கேட்குமளவிற்கு எனக்கு தினசரி சித்ரவதைகள். டெய்லி ஸ்கூலுக்குப் போறது மாதிரி யூனிபார்ம், ஸ்கூல் பையுடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன். இடையில் என்னை மறித்து கூட்டிட்டுப் போவாங்க இருவரும். இதில் புதுமலர் பிரபாகரன் போலீஸில் சொல்லிவிடுவேன் என அடிக்கடி வந்து என்னை சித்ரவதை செய்து சென்று விடுவார். "நீ பெரிய ஆளாக இருக்கலாம்? அதற்காக ஓசியில் அனுப்ப முடியுமா?' கயல்விழி அக்காவிற்கும் புதுமலர் பிரபாகரனுக்கும் சண்டையே வந்திருக்கின்றது. என்னை சித்ரவதை செய்து பாலியல் வல்லுறவு செய்ததில் கரைவேஷ்டிகளுடன் போலீஸ்காரர்களும் அடக்கம்'' என்றிருக்கின்றது பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம்.

 

பரமக்குடியின் அ.தி.மு.க. அவைத் தலைவரும், 3-வது வார்டு கவுன்சிலருமான சிகாமணி, சிறுமி பாலியல் வல்லுறவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து மாநில அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் கூறியுள்ளனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர். ஆனால் கட்சி இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைமையிடம் விளக்கம் கேட்க, எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை மாவட்டத் தலைமை. "எதற்காக சிகாமணியைக் காப்பாற்ற வேண்டும்? இதில் இவர்களும் இருக்கலாமோ?' என சொந்தக் கட்சியினரே கிசுகிசுத்து வருகின்றனர்.

 

இதேவேளையில் சிறுமி பாலியல் வழக்கு மட்டுமில்லாது தன்னுடைய சமூக அமைப்பினைக் காட்டி செங்கல் சூளையினரை மிரட்டி மாமூல் வசூலிப்பில் ஈடுபட்டதும், பரமக்குடி பேராசிரியர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் வாங்கியதும் காவல்துறைக்கு புகாரான வேளையில் புதுமலர் பிரபாகரனை குண்டர் தடுப்புக் காவலில் வைக்க காவல்துறையினர் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சிறுமியை பள்ளிக்குச் செல்ல உத்தரவிட்டும், சிறுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மாவட்ட காவல்துறை சப்தமில்லாமல், வழக்கில் சிக்காத வி.வி.ஐ.பி.க்களைத் தேடத்தொடங்கியுள்ளதால் மாவட்டம் கலகலத்துள்ளது.