Skip to main content

தொழிலாளி கொலை... கோவில் பூசாரியிடம் விசாரணை...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

panrutti issue Temple priest in investigation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது நடுமேட்டுக்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி, வயது 43. கூலி வேலை செய்துவரும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜெயந்தி சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மனைவியை இழந்த கவலையினால் ரவி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்குச் செல்லாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் கண்டபடி சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒண்டிவீரன் கோவில் அருகே முந்திரி தோப்பில் தலையில் ரத்த காயத்துடன் பிணமாகக் கிடந்துள்ளார் ரவி.

 

இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு, காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி அபிநவ், சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மர்மநபர் யாரோ ஒருவர் கோவிலில் புகுந்து அங்கிருந்த குத்து விளக்கை எடுத்துவந்து ரவி தலையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

 

இதையடுத்து கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நொண்டிவீரன் கோவில் பூசாரி உட்பட ஆறு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரம்மாண்ட பேரணி-1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Over 1000 people participate in a grand rally to condole the demise of Vijayakanth

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைத்து கட்சி சார்பில் பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகை தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

NN

இதில் கலந்து கொண்டவர்கள் விஜயகாந்த்  வாழும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொண்டார். பொதுமக்களின் பல்வேறு குறைபாடு குறித்து அவர் செய்த உதவிகள், திரைப்படத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வாறு நாணயமாக நடந்து கொண்டார் என்பது குறித்து பேசினார்கள். இதில் அவர் அன்னதானத்தை முழுமூச்சாக செய்தது அனைத்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தும் அவரது புகழ் மறையாமல் இருப்பதற்கு வாழும் காலத்தில் நடந்து கொண்டவிதம் என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக இரங்கல் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். இது பண்ருட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.