'Panipuri after panchamitai' - Food security department prepares for raid

அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது என கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் சோதனையை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்குள்ள பானி பூரி கடைகளில்மசாலாவில் கலந்துள்ள கலவைகள் குறித்து கேட்டறிந்தனர்.முறையான அனுமதி பெற்று பானி பூரி கடை நடத்தப்படுகிறதா? என்ற ஆய்வு செய்த அதிகாரிகள், பானிபூரி, சாட் உணவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகளில் இருந்த பானி பூரி மசாலாவின் மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

ஒருவேளை புற்றுநோயை உருவாக்கும் நிறமிகள், ரசாயன ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும் பானிபூரியில் ரசாயனங்கள் சேர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

'Panipuri after panchamitai' - Food security department prepares for raid

இந்த அதிரடி ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், ''சென்னையை பொறுத்தவரை இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்குள் சென்னை முழுவதும் ஆய்வு முடித்து விடுவோம். தமிழ்நாடு முழுக்க உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு அந்த மாதிரிகளின் அடிப்படையில் கிடைக்கும் முடிவுகளை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.