Skip to main content

ஊராட்சி மன்ற வாசலில் மது அருந்துபவர்களின் அட்டகாசம்! கண்டுக்கொள்ளாத தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Panic at the door of the village office

 

வேலூர் மாவட்டம், மாநகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள கிராமம் பெருமுகை ஊராட்சி. பெங்களுரூ டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கிராமம். இந்த ஊராட்சிக்கான நிர்வாக அலுவலகமான ஊராட்சி மன்ற அலுவலகம் புதியதாக சமீபத்தில் புனரமைக்கப்பட்டது.

 

அந்த அலுவலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பல சிறுசிறு தொழிற்கூடங்கள் உள்ளன. சாலை ஓரமாகவே இந்த அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்தபடியே இருக்கும். அப்படியிருக்கும் நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த அலுவலகம் வாசலில் அமர்ந்து தினமும் அந்தகிராமத்தை சேர்ந்த சிலர் மது அருந்திக்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த வழியாக செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் பள்ளி நேரம் முடிந்தும், சிறப்பு வகுப்புகள் முடிந்து பெண் பிள்ளைகள் இந்த வழியாக வரமுடியவில்லையாம், அந்தளவுக்கு குடிக்காரர்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்துக்கொண்டு கிண்டல் செய்கிறார்களாம்.

 

இதுக்குறித்து ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜ், துணைத்தலைவர் பிரபு போன்றவர்களிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும், மது அருந்துவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். பின்னர் இதுப்பற்றி சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு ஃபோன் மூலம் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையும் கண்டுக்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

இந்த கிராமத்தின் வழியாக பாலாறு செல்கிறது. பாலாற்றில் இரவு நேரத்தில் மாட்டுவண்டி, டூவீலர்களில் மணல் அள்ளி திருடும் கும்பல், கஞ்சா விற்கும் கும்பலே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரத்தில் உள்ளவர்களோடும், காவல்துறையினரோடும் அதிகம் நெருக்கம் உள்ளது. அதனால் புகார் சொன்னாலும் இவர்கள் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள்.

 

கிராமத்தை சிறப்பாக நிர்வாகம் செய்யவும், தவறுகளை தடுக்கவும்தான் பொதுமக்களால் தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். லட்சங்களில் வருமானம் வரும் ஊராட்சியின் வருவாயை எப்படியெல்லாம் சுரண்டலாம் என நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் இருப்பதற்கு யார் தண்டனை தருவது எனக்கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

தவறு செய்கிறார்கள் எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியா என்கிற கேள்வியும் எழுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்