Advertisment

ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை; கோட்டாட்சியர் தீவிர விசாரணை

Panchayat women ward members case investigation

Advertisment

வாழப்பாடி அருகே, திருமணம் ஆன 55 நாளில் ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஆரியபாளையம் மேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் வெற்றிவேல் (29). இவர், ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி ரம்யா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி திருமணம் நடந்தது. ரம்யா, ஆரியபாளையம் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார்.

புதுமணத் தம்பதியை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது சம்பிரதாயம். அதன்படி, ஆடி பிறப்பையொட்டி கடந்த ஜூலை 17ம் தேதி, ரம்யாவை அவருடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பெற்றோர் வீடும் அதே ஊரில் தான் உள்ளது. ஆடி 18 பண்டிகை முடிந்த நிலையில், ஆக. 8ம் தேதி, கணவர் வெற்றிவேலின் தந்தை நடராஜன், சம்பந்தி வீட்டுக்குச் சென்று மருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Advertisment

அன்று இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். கணவர் அயர்ந்து தூங்கிய நிலையில், ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்தபோது அவர் சடலமாகத் தூக்கில் தொங்குவதைக் கண்டு கணவரும், அவருடைய பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ரம்யாவின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்களுடன் வந்தனர். மகளின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து ரம்யாவின் தந்தை அண்ணாதுரை, ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 55 நாள்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கை ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, வாழப்பாடி டி.எஸ்.பி ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கணவரின் பெற்றோர் கொடுமைப்படுத்தியதால் இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. திருமணம் ஆன இரண்டு மாதத்திற்குள் புதுப்பெண் இறந்த சம்பவம் ஆரியபாளையம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Investigation police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe