Advertisment

அதிகாரியை மாற்றக்கோரி ஊராட்சிமன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டம்...

Panchayat leaders of perambalur district collector's office

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி செய்து வருகிறார் அறிவழகன். இவர் ஊராட்சி மன்ற தலைவர்களை மதிப்பதில்லை, கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் கரோனா விழிப்புணர்வு உட்பட கிராம ஊராட்சிகளுக்கு செய்யவேண்டிய உடனடித் தேவைகளை, பணிகளை நிறைவேற்றித் தருவதற்கு ஒத்துழைப்பதில்லை என்றும் மேலும் இவர் ஊராட்சி மன்றத் தலைவர்களை மரியாதை குறைவாக பேசுவதாகவும் இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அறிவழகனை அங்கிருந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்களை சந்தித்து நேரில் புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரை சந்திப்பதற்காக காத்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் சாந்தா, ஊராட்சி மன்ற தலைவர்களை சந்திக்காமல் அலுவலகத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு வேகமாக சென்றுள்ளார்.

இதனால் கோபமுற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி மதிக்காமல் அவமரியாதையாக நடத்துவதாக கூறி கோபமுற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாரதிதாசன் போராட்டத்தில்அமர்ந்திருந்த ஊராட்சி தலைவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டுவிரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Advertisment

அதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கரோனா பரவல் பயம் காரணமாக பல மாதங்களாகவே பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு சம்பந்தப்பட்ட அலுவலர் சங்கத்தினர் உட்பட யாரையும் நேரடியாக சந்திப்பதில்லை, மனு வாங்குவதில்லை, குறைகளை கேட்பதில்லை, தானுண்டு தன் பணி உண்டு என நீண்ட சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறார் என்கிறார்கள் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்.

தமிழகத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் உயிரை கூட பெரிதாக எண்ணாமல் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில்இரவு பகல் பாராமல் கடுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணி செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவின் செயல்பாடுகள் மாவட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் சாந்தாவை மாற்ற வேண்டும். மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

Perambalur
இதையும் படியுங்கள்
Subscribe