Skip to main content

கோவை அருகே பான் மசாலா ரகசிய தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பான்மசாலா தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை  கைப்பற்றினர்.

 

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் எனும் இடத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள 15 அடி சுற்றுச்சுவர் கொண்ட ஒரு ரகசிய தொழிற்சாலையில் ஊர் மக்களுக்கே தெரியாமல் பான் மசாலா உற்பத்திசெய்து வந்தது அப்பகுதி மக்களுக்கே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
 

panmasala

 

அந்த தொழிற்சாலையில் சட்டவிரோத முறையில் பான் மசாலா உற்பத்தி செய்துவருவதாக எழுந்த புகாரில் நேற்று போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரகசிய தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக  பல கோடி மதிக்கத்தக்க பான்மசாலா பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பான்மசாலா மூட்டைகளை கைப்பற்றினர். மேலும் அந்த ஆலையில் வி.ஐ.பி என்ற பெயரில் பான்மசாலா பாக்கெட்டுகள் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

இதைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களுக்கு இப்படி ஒன்று இங்கு நடப்பதே தெரியாது எனவும், இரவில் மட்டும் இந்த பகுதிக்கு லாரிகள், ஆட்டோக்கள் வந்துபோகும் மற்றபடி அங்கு என்ன நடக்கிறது என்றுகூட அதிகம் பேருக்கு தெரியாது எனவும் கூறினர்.

 

panmasala

 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தொழிற்சாலை டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பாக ஆலையின் மேலாளர்  ரகு என்பவரை பிடித்து விசாரித்து வருதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

டீக்கடையில் குட்கா விற்பனை; 3 பேர் கைது; 26 கிலோ பறிமுதல்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Sale of Gutka at Tea Shop; 3 arrested; 26 kg seized

 

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ளதோடு பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வபோது  ரகசிய தகவலின் பெயரில் பெட்டிக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், எட்வரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

 

Next Story

113 கிலோ பறிமுதல்; 26 காவலர்களுக்கு செக்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட இடங்களில் குட்கா விற்பனை தொடர்பாக போலீசார் அண்மையில் சோதனை நடத்தினர். எண்ணூர், மணலி, புதுநகர், மாதவரம், ஆவடி, அம்பத்தூர்,சோழவரம் என பல பகுதிகளில் சோதனை அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளிலும் குட்கா பொருட்கள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் குட்கா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என மொத்தம் 26 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். குட்கா விற்பனை செய்வோர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.