Skip to main content

வெற்றியூர் கிராமத்தில் பனை விதைகளைப் பரப்பி இளைஞர்களை அமரவைத்து விழிப்புணர்வு... காவல்துறை ஊக்குவிப்பு!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Palm planting program

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில், பனை விதைகள் விதைக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வெற்றியூர் கிராமத்தில் உள்ள சின்ன ஏரிக்கரையில் பனை விதைகளைக் கொண்டு கோலமிட்டு பனை மரம் வரைந்தும் அதில் இளைஞர்களை அமரவைத்தும் - நிற்க வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

ஓவியர் மாரியப்பன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பனை மரத்தை வரைந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன், வெங்கனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார், 3 இலட்சம் பனை விதைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம், ஸ்வீட் பாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், வெற்றியூர் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி முன்னேற்றக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

பின்னர் நடந்த 2,000 பனை விதைகள் நடவு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். பனையின் அவசியம் குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், அரியலூர் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் 3 இலட்சம் பனை விதைகளை விதைக்கின்ற நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய வழியில் பனையின் பயன்களைப் பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

Palm planting program

 

'கஜா' புயலின்போதுகூட எந்தவித பாதிப்பும் ஏற்படாத நம் தமிழக மாநில மரமான பனையை மீட்டெடுக்கும் வகையில், '3 இலட்சம் பனை விதைப்பு' இயக்கம் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் முதன்முதலாக 1,100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி முதல், குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள குரங்கு ஏரி, அய்யாவூட்டு ஏரி, கடுகூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையிலும் சிறப்பான முறையில் பனைவிதைகள் நடப்பட்டுள்ளது. 


பனை விதைகள் விதைப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழப்பழுவூர் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசுவரன் கூறுகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கூறியது போல காவல்துறை அனைத்து வகையிலும், பனை விதைகளை நடவு செய்யும் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றார். 

 

Ad


மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி தவமணி சுப்ரமணியன் ஒன்றிய கவுன்சிலர் கண்ணே செல்வம், மாவட்ட கவுன்சிலர் கீதா ஜெயவேல் மற்றும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 'அன்புடன் அக்னி சிறகுகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வினோதகன், சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியூர் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி முன்னேற்றக் குழு உறுப்பினர்கள், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னெடுப்புக்கு முதல்வர் வாழ்த்து

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

The CM congratulates the progress of the Palm Tree Workers Welfare Board

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நாளை (01.10.2023) தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞரின் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் 01-10-2023 அன்று தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

 

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இவ்வாரியம் க்ரீன் - நீடோ சுற்றுச் சூழலமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவுள்ளார்கள் என்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது.

 

The CM congratulates the progress of the Palm Tree Workers Welfare Board

 

தமிழ்ச் சமூகத்துக்கு வாழ்நாள் எல்லாம் பல வகையிலும் பல துறையிலும் பயனளித்திட்ட  கலைஞர் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் இந்த சீரிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இதற்காகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனையும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனையும் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"கள்ளுக் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர்" -  என்.ஆர். தனபாலன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

dhanabalan talks about palm juice  shop related karur meeting

 

கரூரில் தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத் தலைவர் என்.ஆர். தனபாலன் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகளும் புது நிர்வாகிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

 

விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத் தலைவர் என்.ஆர். தனபாலன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, "தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரத்தின் கள் ஒரு இயற்கை உணவாகும். கள்ளு குடித்து உயிர் இழப்பு ஏற்படுவதை நிரூபித்தால், எங்கள் பேரவையின் சார்பில் ஒரு கோடி பரிசு தருகிறோம் என அறிவித்தோம். பின்னர் பத்து கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை. பனையால் விவசாயி வாழ்வான். பனை மரத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வார்கள். தேர்தல் வரும் பொழுது பனை மரத்தை பாதுகாப்போம் பனைமரத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்போம் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள்.

 

கள்ளுக் கடை திறந்தால் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்து கள்ளுக் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழக அரசுக்கு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே ஒரு கோரிக்கை கள்ளுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆகும். தமிழகம் விளையாட்டுத்துறையில் மேம்பட்டு விளங்கவும், ஒலிம்பிக்கில் கபாடியை கொண்டு சேர்த்ததும் இன்னும் எண்ணற்ற நலன்களை விளையாட்டு துறைக்கு செய்த சிவந்தி ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கடைகளை தமிழகத்தில் திறக்காவிட்டால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.