
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என 4 பேரும் தெரிவித்துள்ளனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஏற்கனவே கொலையில் முக்கிய குற்றவாளியாகக்கருதப்படும் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற இரண்டு பேரையும் உடனடியாகப் பிடிக்க வேண்டும் எனச் சாலை மறியல் போராட்டத்தில் மீண்டும் உறவினர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லத்தம்பி என்பவரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டுவதற்காகக் காவல்துறையினரை பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற செல்லதுரை, போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். அப்பொழுது செல்லதுரையின் வலது கால் முறிந்தது. அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் போலீசார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் மூன்றாவது நபராக சோனை முத்தையா என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)