Skip to main content

கோலாகலமாக நடைபெற்ற பழனி முருகன் குடமுழுக்கு விழா 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

palani murugan temple festival 

 

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் சன்னிதானம், அடிவாரம், கிரி வீதியில் லட்சம் பக்தர்கள் வரை திரண்டு நின்று குடமுழுக்கு விழாவை கண்டுகளித்து விட்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்த குடமுழுக்கு விழாவிற்காக 23 ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத,  நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என முருக கடவுளைப் போற்றிப் பாட தமிழில்  குடமுழுக்கு விழா நடைபெற்றது.

 

முன்னதாக கங்கை,  காவிரி,  சண்முக நதி எனப் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டு சென்று கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர். அதிகாலை 5 மணி முதல் சிவாச்சாரியார்கள் ஓதுவார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 8.45 மணிக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் பச்சைக்கொடி காட்டியவுடன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தண்ணீர் பீய்ச்சும் கருவிகள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழா முடிந்த பின் முருகனை தரிசிக்க மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களை மலை மீது அனுப்பி விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல் முருக பக்தர்கள்  கூட்டம் அதிக அளவில் உள்ளதால் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் ஹெலிகேம் பறக்க விடப்பட்டு கண்காணிப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல் குடமுழுக்கு விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

புறவழிச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு புளியம்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள ஆர்வமாக முருக பக்தர்கள் பலரும் பழனியில் குவிந்துள்ளனர். பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மலை மீதும் படி பாதையில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள் புனரமைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் குடமுழுக்குப் பணிகளில் ஈடுபட்டு பணியை சிறப்பாக செய்திருப்பதைக் கண்டு முருக பக்தர்கள் பூரித்துப் போய் விட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.