Skip to main content

மழை வேண்டி பழனி கோவில் அர்ச்சகர்கள் தண்ணீரில் உட்கார்ந்து  வருண பூஜை!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019


தமிழகத்தில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  அதுபோல் கடும் வெயில் நிலவி வருவதால் வன உயிரினங்களும் வனத்தை விட்டு  வெளியேறி ஊருக்குள் வருகிறது.  அதனால்தான் தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் மழை வேண்டி  சிறப்பு  பூஜை நடத்த இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

p


      அதன் அடிப்படையில் தான் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருண பூஜை நடைபெற்றது.  முன்னதாக கோவிலில் உள்ள சிவன், பெரியநாயகி அம்மன் முத்துக்குமார சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதை தொடர்ந்து கோவிலில் உள்ள நந்தி சிலைக்கும் சிவனுக்கும் சிறப்பு அபிசேகங்கள் மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

 

p


     அதன் பிறகு கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் கோவில் அர்ச்சகர்கள்  இறங்கி மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தனர். முன்னதாக கலசம் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.  இந்த வருண பூஜையை தொடர்ந்து  யாகமும் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி திருக்கோவில் குடமுழுக்கு; ஏற்பாடுகள் தீவிரம்

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

palani murugan temple festival celbrations 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நாளை (27.01.2023) நடைபெற உள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைக்கான  அறிவிப்பை ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து  பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள தேர்வுகள் பாதிக்காத வகையில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மறுநாள் ஜனவரி 28 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என்றும், குடமுழுக்கைக் காண மலைக் கோவிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் காலை 4 மணி முதல் 7.15 மணிக்குள் மலைக் கோவிலுக்குச் சென்று விட வேண்டும். கூட்ட நெரிசலைத்  தவிர்ப்பதற்காக ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2 ஆயிரம் பக்தர்களும் யானை வழிப் பாதை வழியாக 4 ஆயிரம் பக்தர்களும் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். குடமுழுக்கின் போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களுக்கு மலர் தூவப்படவுள்ளது. அப்போது மலை மீது உள்ள பக்தர்கள் மீது குடமுழுக்கு செய்த நீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடமுழுக்கைக் காண விரும்பும் பக்தர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் பக்தர்களுக்காக 26 ஆம் தேதி இரவு 11 மணி வரை ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கூட்ட நெரிசலைத் தவிர்க்க பழனி - தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து 35 இலவச சிறப்பு பேருந்துகள் மூலம் பழனி நகருக்குள் வந்து மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பழனி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1500 வாகனங்கள் வரை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குடமுழுக்கு நிகழ்வையொட்டி 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பக்தர்களைக்  கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்களும், 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு மலைக்கோயில் பாதை உள்பட அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தைப்பூசம் நெருங்குவதை ஒட்டி பாத யாத்திரையாக தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகனுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், இதையொட்டி தமிழகத்தில் உள்ள திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கரூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களிலிருந்து மூன்று லட்சம் பக்தர்களுக்கு மேல் குடமுழுக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

நாளை பழனி சன்னிதானத்தில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி அடிவாரத்தில் உள்ள கோவில்களில் இன்று குடமுழுக்கு நடந்து வருவதால் அதில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அதேபோல் பழனி நகரமே குடமுழுக்கை முன்னிட்டு விழாக் கோலமாக  காட்சி அளித்து வருகிறது. 

 

 

Next Story

பழனி கஸ்தூரி யானைக்கு கரோனாஆய்வு!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

பழனி கோவில் யானை கஸ்தூரிக்கு கரோனா பரவாமல் இருக்க வனத்துறை மற்றும் கால் நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

 

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 44 வயதான கஸ்தூரி, யானை பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோவிலில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கஸ்தூரி பங்கேற்கவில்லை.

 

palani murugan temple elephant



தற்பொழுது கரோனா பரவி வருவதால் கஸ்தூரியை வனத்துறையினர் முன்னிலையில் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் யானையை பாதுகாக்க மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.


அதில் கஸ்தூரி யானையின் வழக்கமான செயல்களில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே கோயில் நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு கிருமி பரவாமல் இருக்க வெளியாட்களை யானையின் பக்கத்தில் அனுமதிக்கவே கூடாது.


யானைக்கு நடைப்பயிற்சி, கோடை காலங்களில் கோடை கால குளியல் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. இந்த சோதனையின்போது மாவட்ட வனச்சரக அலுவலர் வித்யா, பழனி வனச்சரகர் விஜயன், கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கோயில் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.