தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வெளியிடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் மாற்றப்பட்டு, அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. முழு சுகாதார கிராமம் என்று அனைத்து கிராமங்களிலும் பதாகைகள் வைத்து விளம்பரங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதிக்கு மேல் கழிவறைகளே இல்லாத வீடுகள்தான் உள்ளது. காலை எழுந்தவுடன் இயற்கை உபாதைகளைக் கழிக்க வெளியிடங்களை தேடிச் செல்லும் நிலை இன்றுவரை நீடிக்கிறது. அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகள் வெளியிடங்களுக்கும் போகமுடியாமல் வீட்டிலேயே இயற்கை உபாதைகளைக் கழிக்க, அதை அவர்களின் தாய்மார்களே இன்றுவரை அள்ளிச் சுமக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வலங்கொண்டான் விடுதி கிராமத்தில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி தம்பியுடன் வசிக்கும் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி பாக்கியலட்சுமிக்கு வயது 30. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு நக்கரைத்து அடுத்த இடத்தை அடைகிறார். இவருக்கு ஒரு வீடோ ஒரு கழிவறை வசதியோ கிடைக்கவில்லை. இதனால் 30 வயதிலும் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி நம்மிடம் பேசும் போது.. "எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் மாற்றுத் திறனாளியான தம்பியும்தான். குடியிருக்க ஒரு வீடு இல்லை. அதைவிட ஒரு கழிவறை இல்லை. என்னால நடக்க முடியாது. 10 அடி தூரம் போக 10 நிமிடம் ஆகும். கைகளை ஊன்றி நக்கரைத்துத் தான் போகனும். இதைவிடக் கொடுமை இயற்கை உபாதை கழிக்க கழிவறை இல்லாததால், வீட்டு ஓரமாகத்தான் எல்லாமே. எங்க அம்மா தான் அள்ளி வீசுறாங்க. சின்ன குழந்தைக்குச் செய்றது போலச் செய்றாங்க. அதனால அவுங்களும் வேலைக்குப் போக முடியல. எங்களுக்கு ஒரு கழிவறையும் பிழைக்க ஒரு சின்ன கடையும் கிடைத்தால், மீதி காலத்தையாவது நிம்மதியாக நகர்த்துவோம்" என்றார் வேதனையோடு.
'மக்கள் பாதை' மூலம், பாக்கியலட்சுமிக்காக உதவ, புதுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர் ராமதாஸ் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருகிறார்.
இப்போது பாக்கியலட்சுமியின் முதல் தேவை கழிவறை...