பஹல்காம் தாக்குதல் சம்பவம்; தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

Pahalgam incident TN govt announces helpline numbers

ஜம்மு - காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐம்மு - காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன்.

தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே 011-24193300 (தொலைபேசி எண்) மற்றும் 9289516712 (வாட்ஸ் அப் வசதியுடன் கூடிய அலைபேசி எண்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

இதற்காக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சம்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிகொண்டது, மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன.

Pahalgam incident TN govt announces helpline numbers

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள குடியிருப்பு ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

help line number jammu and kashmir mk stalin tn govt Pahalgam
இதையும் படியுங்கள்
Subscribe