Skip to main content

அதிகாரிகளின் தொடர் அலட்சியம்... மழையில் நனைந்து நாசமான ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்...

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் வாங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வாங்க கால தாமதம் செய்து வியாபாரிகளின் நெல் மூட்டைகளை வாங்கி அடுக்குவதாக விவசாயிகள் பல போராட்டங்கள் செய்த பிறகு வாங்கினார்கள். அதற்கும் ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 முதல் 50 வரை கமிசனாக கொடுக்க வேண்டி இருந்தது.
 


இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அதே பகுதியில் உள்ள திறந்த வெளி குடோன்களில் பாதுகாப்பில்லாமல் அடுக்கி வைத்து மழையில் நனைய வைத்து நாசமாக்கினார்கள். மேலும் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அருகில் உள்ள பாதுகாப்பு குடோன்களுக்கு தினசரி லாரியில் ஏற்றிச் சென்று பாதுகாக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான குடோன்களில் வைக்கப்படுவதாகவும் திறந்த வெளி குடோன்களில் வைத்து பாதுகாப்பதாகவும் அதற்காக தார்ப்பாய்கள் வாங்கியதாகக் கணக்கு எழுதி பணம் எடுத்துள்ளனர். ஆனால் பாதுகாக்காப்படாமல் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் கிராமத்தில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கிய ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மழைத் தண்ணீர் தேங்கும் பள்ளத்தில் அடுக்கி வைத்து அத்தனை மூட்டைகளும் தேங்கிய மழைத் தண்ணீரில் நனைத்து ஊரி நாசமானது. 
 


அவற்றை சத்தமின்றி குடோன்களுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் வாங்கிய நெல் மூட்டைகளை அதே இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் அடுக்கி வைத்துள்ளனர். பருவமழை மற்றும் வெப்பச் சலன மழை பெய்யப் போகிறது என்று வானிலை அறிக்கைகள் சொல்லப்படும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நாசமாகப் போகிறது.


அதே போல திருமயம் அருகில் உள்ள துளையானூர் கிராமத்தில் மழைத் தண்ணீர் செல்லும் வரத்து வாரி அருகில் கட்டப்பட்டுள்ள நெல் பாதுகாப்பு குடோனில் நெல் மூட்டைகளை வைக்காமல் திறந்த வெளியில் அடுக்கி வைத்து தார்ப்பாய்கள் இல்லாமல் கடந்த வாரம் பெய்த கனமழையில் நனைந்து பல ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. இதைப் பற்றி எந்த அதிகாரியும் கவபை்பட்டதாகத் தெரியவில்லை. 
 

http://onelink.to/nknapp


வியர்வை சிந்தி விவசாயிகள் உற்பத்தி செய்து மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்படி நாசமாக்குவது வேதனை அளிக்கிறது. இந்த வேதனை நிகழ்வுகளை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் போய் நீதி கேட்க தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் போகும் அதிகாரிகள் என்ன சொல்லி சமாளிப்பார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் எஞ்சியுள்ள நெல் மூட்டைகளையாவது பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் இருந்தால் சரி. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Chance of rain in 5 districts

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 9.35 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.