Skip to main content

“தமிழ்நாடு முழுக்க பள்ளிகளை மாற்ற பச்சலூர் தலைமை ஆசிரியரை அனுப்பலாம்” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

"Pachalur headmaster can be sent to change schools in Tamil Nadu" - Minister Meiyanathan

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், பச்சலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முதலமைச்சர் விரும்பும் அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான ஹைடெக் பள்ளியாக இன்று தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. இதனால் தமிழக அரசின் கர்ம வீரர் காமராஜர் விருது வழங்கியதுடன் உணவுப் பாதுகாப்புத்துறையின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மதிய உணவைத் தரமாகவும், சுத்தம், சுகாதாரமாகவும் வழங்குவதைப் பார்த்து மத்திய அரசின் ‘வெரி குட்’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், பல தரப்பினரும் பள்ளியைக் காண வருவதுடன் தொடர்ந்து பாராட்டியும் வருகின்றனர். வெளியூர், வெளிநாடுகளில் பச்சலூர் கிராமத்தினர் நாங்கள் ‘பச்சலூர்காரன்’ என்பதில் பெருமைப்படுவதாகக் கூறி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திடீரென பச்சலூர் பள்ளிக்குச் சென்று பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து மதிய உணவு தயாரிப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு அறை, உணவு உண்ணும் அறை, தயாரிக்கப்பட்ட உணவு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவர் பள்ளிக்கு மேலும் என்ன தேவை என்பதைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டார். அப்போது, “தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், தன்னார்வலர்கள், கொடையாளர்களின் பங்களிப்போடு நிறைவாக உள்ளது” என்று தலைமை ஆசிரியர் ஜோதிமணி கூறினார். 

 

"Pachalur headmaster can be sent to change schools in Tamil Nadu" - Minister Meiyanathan

 

சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டிய அமைச்சர் மெய்யநாதன், நிகழ்வில் பேசும்போது, “2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதையும், தரமான மதிய உணவை வழங்குவதற்காக ஒன்றிய அரசின் ‘வெரி குட்’ விருதையும் பெற்ற ஒரே பள்ளி பச்சலூர் என்ற பெருமை உள்ளது. இந்த விருதுகளை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை. பள்ளிக்குள் வந்துவிட்டாலே சுற்றுப்புறச் சூழல் அருமையாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கிறேன். வெப்ப மயமாகும் நாட்டில், பசுமை சூழ்ந்த குளிர்ச்சியான இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் எத்தனை மணி நேரமானாலும் அமர்ந்திருக்கலாம் என்று உள்ளது. இங்கு மட்டுமல்ல இந்த தலைமை ஆசிரியர் ஏற்கனவே பணியாற்றிய மாங்குடி பள்ளியிலும் அப்படித் தான் வைத்திருந்தார். இங்கு கட்டிடங்களாவது தெரிகிறது மாங்குடியில் வனமாக காட்சியளிக்கும். அதனால் அனைவரிடமும் இருந்து வேறுபட்டிருக்கும் நல்லாசிரியர் எனலாம்.

 

தமிழ்நாட்டில் 30,222 பள்ளிகளில் சுமார் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுமையாகச் செயல்படுத்தும் நம்பர் ஒன் பள்ளியாகத் தலைமை ஆசிரியர் ஜோதிமணி பணியாற்றும் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு மட்டும் தான் இவர் செய்கிறாரா என்றால் இல்லை. இந்தப் பள்ளியைப் பார்த்து இவரது ஆலோசனையில் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி திறன் வகுப்பறை முதல் அனைத்து வசதிகளுடன் சிறப்பான பள்ளியாக மாற்றி உள்ளார். 

 

"Pachalur headmaster can be sent to change schools in Tamil Nadu" - Minister Meiyanathan

 

அங்கு நான் சுற்றுச் சுவர் கொடுத்து தரமான பள்ளியைத் திறந்து வைத்தேன். அதைப் பார்த்து வடகாடு வடக்குப்பட்டி பள்ளி, பரமன் நகர் பள்ளிகளும் மாறிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் ஒதுக்கி இருக்கிறேன். மேலும் புதுக்கோட்டை விடுதி பள்ளியும் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது. இது மட்டுமா, தலைமை ஆசிரியரின் சொந்த ஊரான அழியாநிலை அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதே போல மூக்குடி பள்ளி எனப் பல பள்ளிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி அரசுப் பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் தலைமை ஆசிரியர் ஜோதிமணியை தமிழ்நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் மூலமே நியமித்து இந்தப் பணிகளைக் கொடுத்தால் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியும்” என்று பேசினார். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.