சென்னையில் நேற்று முன் தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தை வழிமறித்து, டிரைவரை மிரட்டி விட்டு, பட்டாக் கத்தியை எடுத்து சுழற்றிய படியே சத்தம் போட்டுக் கொண்டு தாங்கள் தேடி வந்த மாணவர்களை பார்த்ததும் பஸ்சுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டினர். சாலையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டியும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisment

p

இந்த தாக்குதலில் 7 மாணவர்களுக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலேயே ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த மாணவர்களில் குன்றத்தூரை சேர்ந்த வசந்தகுமார், திருவேற்காடு வேலப்பன்சாவடியை சேர்ந்த ஆகாஷ் ஆகிய 2 மாணவர்கள் மட்டும் மீட்கப்பட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் மற்ற 5 பேரும் காயத்துடனேயே தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.