தமிழகத்திற்கு கூடுதல் ரயில்வசதி தேவை என்று மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் இன்று (13/02/2021) பேசிய பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர், "சென்னையில் (எழும்பூர்) இருந்து மேல்மருவத்தூர் வழியாக புதுச்சேரி வரை செல்லும் ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறேன். மங்களூருவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில் மீண்டும் குளித்தலையில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதேபோல், 'திருச்சி- ராமேஸ்வரம்' ரயில், 'பல்லவன்' ரயில் ஆகியன கீரனூரில் நின்றுசெல்ல வேண்டும் என்ற புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையையும் இங்கே முன்வைக்கிறேன். குளித்தலை ரயில் நிலையத்தில், டிஜிட்டல் அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.