Skip to main content

“மாவீரர்கள் காட்டிய வெளிச்சத்தில் தமிழீழம் பிறக்கும்!” வட அமெரிக்க நிகழ்வில் பெ. மணியரசன் பேச்சு!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
p maniyarasan



“நாடு கடந்த தமிழீழ அரசு” சார்பில், வட அமெரிக்காவின் நியூயார்க்கில் 27.11.2018 அன்று மாலை “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” - வீரவணக்க நிகழ்வை நாடு கடந்த தமிழீழ அரசு  ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. வி. உருத்திரகுமாரன் நினைவுரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.

பெ. மணியரசன் பேசுகையில்,

மாணவனாக இருந்தபோது, மாவீரர்கள் இப்படித் தோன்றுவார்கள் என நான் நினைத்ததில்லை. அப்போது, வட அமெரிக்க வல்லரசை எதிர்த்து வியட்நாமில் வீரஞ்செறிந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கு எதிராக அந்த சின்னஞ்சிறு வியட்நாமிய மண்ணில் ஆண்களும், பெண்களும் போராடுகிறார்கள், உழவர்கள் போராடுகிறார்கள் என்று வந்த செய்திகள், எங்களுக்கு உற்சாகமளித்தன. அதுபோல், நம்மினத்திலும் வீரர்கள் தோன்றுவார்களா என்ற ஐயமும் ஏற்பட்டது.

 

ஆனால், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் களத்திற்கு வந்தபின், நான் வியந்து பார்த்த வியட்நாம் போராட்டத்தை விஞ்சும் அளவுக்கு, புதுப்புது வகைகளில் வீரப்போர் புரிந்த தமிழ் மறவர்களை - புலிகளைப் பார்த்துப் பெருமிதம் கொண்டேன்.

 

இந்த தமிழினத்தின் உள்ளாற்றல் வீரம் நிறைந்தது; அறிவாற்றல் நிறைந்தது; அறம் நிறைந்தது! அதன் எடுத்துக்காட்டுதான், தமிழீழ விடுதலைப்புலிகள்! அந்த மாவீரர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

மாவீரர்களே, நீங்கள் வாழ்ந்தபோது பகைவன் உங்களைக் கண்டு அஞ்சி நடுங்கினான்! நீங்கள் மறைந்த பிறகும்கூட, உங்கள் கல்லறைகளைப் பார்த்து பகைவன் அஞ்சுகிறான்! அதனால்தான், மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களர்கள் சிதைக்கிறார்கள்; அதற்காக சதி வேலைகளிலும், வன்முறைகளிலும் இறங்குகிறார்கள்.

 

ஆனாலும், நீங்கள் கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழ்கிறீர்கள்! துயிலும் இல்லங்களில் மட்டும் உங்கள் நினைவுகள் இல்லை! தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அத்தனைக் கோடி தமிழர் நெஞ்சங்களிலும் நீங்கள் வாழ்கிறீர்கள்! சுடர்விட்டு எரிந்து கொண்டு, வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! புதிய நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! நம்முடைய கனவு பலிக்கும் - தமிழீழம் பிறக்கும்!

 

நம் தமிழினத்தின் அடையாளம் உலகுக்கு உங்களால்தான் எடுத்துக்காட்டப்பட்டது. வரலாற்றில் நீங்கள் எப்போதும் தனி இடம் பெற்றிருப்பீர்கள்!

p maniyarasan

தமிழீழ விடுதலைக்காக தமிழீழத்தில் நடந்த ஈகங்கள் கொஞ்ச நஞ்சல்ல; அந்த தியாகங்களை நடத்திக் கொண்டே, மக்கள் ஒருங்கிணைந்தார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தார்கள். பொய் வாக்குறுதி - போலி வேடங்கள் போடும் தலைமையின் கீழ் அல்ல! பல பிரிவுகள் இருந்தாலும், இலட்சியத்தில் உறுதியானவர் பிரபாகரன் என்று உணர்ந்து, அவரது தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தார்கள். தலைவரின் சொல்லை மந்திரம் போல் மக்கள் கருதி னார்கள்.

 

இன்றைக்கும், இவ்வளவு ஈகங்களுக்குப் பிறகும் “தலைவர் பிரபாகரன்”, தற்போது ஒரு தெய்வம் போல உலகத் தமிழர்களால் நேசிக்கப்படுகிறார் அவரது அறிவாற்றல்; ஈகம்; தன் குடும்பத்தையே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திய அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இதற்குக் காரணம்!

 

வரலாற்றில் நாம் சில பின்னடைவுகளை சந்தித்திருக்கலாம். ஆனால், தலைவர் பிரபாகரன் தான் தலைமை வழிகாட்டி என்று இன்னும் கூடுதல் மதிப்போடு அனைவரும் பாராட்டும் நிலைமைதான் இன்றிருக்கிறது.

 

தமிழீழத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் தியாகங்கள் நடந்துள்ளன. 1995இல் அப்துல் ரவூப் என்ற இளைஞன் சிங்கள விளையாட்டு அணி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தீக்குளித்து உயிரீகம் செய்தார். அதன்பின், 2009இல் தமிழீழத்தில் போர் நிறுத்தம் வர வேண்டுமென தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி வைத்த மாபெரும் எழுச்சியின்போது, பள்ளப்பட்டி இரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், சதாசிவம் சிறீதர், நாகலிங்கம் ஆனந்த், அரியலூர் இராசசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், சிவகாசி மாரிமுத்து, கரூர் சிவானந்தன், திருப்பூர் சுப்பிரமணி ஆகிய 18 தமிழர்கள் தீக்குளித்து உயிரீகம் செய்தனர். சுவிட்சர்லாந்தில் முருகதாசும், மலேசியாவில் இராஜாவும் உயிரீகம் செய்தனர். இவ்விருவரும் தமிழீழத் தமிழர்கள்!

 

இதுமட்டுமல்ல, பல பேர் தங்கள் சொத்துகளை இழந்தார்கள். தடா, பொடா போன்ற கொடுஞ் சட்டங்களை ஏவி பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், வைகோ போன்ற பல தலைவர்களை சிறையிலே அடைத்தார்கள். 2009ஆம் ஆண்டு, போர் நிறுத்தம் கேட்டாலே, புலிகள் ஆதரவாளர் என சிறையில் தள்ளினார்கள். அரசுக்கு எதிராகச் சதி எனக் குற்றம்சாட்டி 124ஏ  - பிரிவில் வழக்குப்போட்டார்கள். என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை, வேலூர், கோவை, திருச்சி சிறைகளில் நான் இருந்திருக்கிறேன்.

 

பலர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அமெரிக்காவிலும் பலரை சிறையில் போட்டார்கள். சாக்ரடீஸ் என்ற தமிழர் இங்கே சிறையில் அடைக்கப்பட்டார். விசுவநாதன் என் தமிழின உணர்வாளர் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு, மீண்டும் திரும்ப முடியவில்லை! பொறியாளர் - முனைவர் தணிசேரன் அவர்கள் தமிழ்நாட்டுக்குப் போக நிரந்தரத் தடை போட்டுள்ளார்கள்.

 

இவ்வளவு ஈகங்கள் செய்தாலும், எங்களால் போர் நிறுத்தம் கொண்டு வர முடியவில்லையே என்ற ஏக்கமும், தன் திறனாய்வும் இருக்கிறது. எட்டுக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தும், போர் கொடுமையிலிருந்து தமிழீழ மக்களைப்  பாதுகாக்க முடியவில்லையே என்ற துயரம் எப்போதும் எங்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது.

 

இந்த உணர்வு, தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்ததைவிட மிகப்பெரும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராட ஊக்கமளிக்கும்! உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், “கடல் நம்மைப் பிரித்தாலும் அன்னைத் தமிழ் நம்மை இணைக்கிறாள்” என்பார். நம் அனைவரையும் தமிழ்தான் இணைக்கிறது! இணைத்துக் கொண்டிருக்கிறது!

 

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டார்கள், அதனால்தான் வெற்றி பெற முடியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளும், தலைவர் பிரபாகரன் அவர்களும் எப்போதும் இந்தியாவுடன் பகைப் போக்கைக் கடைபிடிக்கவே இல்லை!

 

1987இல், இந்தியா தன்னிச்சையாக இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்ட போதுகூட, புலிகள் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளவில்லை!
 

பிரபாகரன் முதலமைச்சர் ஆகிவிட்டால் எல்லாம் நடந்திருக்கும் என்று கூறுபவர்களும் உண்டு! இன்றைக்கு, வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் அவர்களால் என்ன உரிமையைப் பெற்றுத் தர முடிந்தது? வரதராசபெருமாள் போல் திணிக்கப்பட்டவர் அல்ல - விக்னேசுவரன்! தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர்! தனது அலுவலகத்துக்கு ஒரு நாற்காலி வாங்க வேண்டுமென்றாலும்கூட, கொழும்பைத்தான் கேட்க வேண்டும் என்ற நிலை இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

 

கடந்த 2016 செப்டம்பர் 24ஆம் நாள், தமிழீழத்தில் மிகப்பெரும் மக்கள் பேரணியை நடத்திய விக்னேசுவரன் அவர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். அதில் முதல் தீர்மானம் - சிங்களர்களே வசிக்காத தமிழீழப் பகுதிகளில் புதிதாக புத்தக் கோயில்கள் வைக்கப்படுகின்றன, அதைத் தடுக்க வேண்டும் என்கிறார். புதிதாக அங்கு நிறுவப்படும் புத்த கோயில்களைத் தடுக்கும் அதிகாரம்கூட அங்குள்ள முதலமைச்சருக்கு இல்லை!

 

அடுத்து, இரண்டாவது தீர்மானமாக - தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றங்களைத்  தடுக்க வேண்டும் என்கிறார். அதைத் தடுக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை! 

 

மூன்றாவதாக, சிங்கள இராணுவம் தமிழீழத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்கிறார். அவர் மட்டுமல்ல, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழுவும் தமிழர் பகுதிகளைவிட்டு சிங்கள இராணுவம் வெளியேற வேண்டுமெனச் சொன்னது. ஆனால், ஏன் நடக்கவில்லை? யார் இதைச் செயல்படுத்துவது? இலங்கைக்குத் துணை நிற்கும் இந்தியா, வட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இதற்குக் குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்!

 

நான்காவதாக, ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின்படி தமிழீழப் படுகொலைக்கு ஒரு விசாரணை வேண்டும் என்கிறார். பன்னாட்டு விசாரணை கிடையாது, உள்நாட்டு விசாரணைதான் என்று ஐ.நா. மனித உரிமை அவையிலே தீர்மானமெல்லாம் போட்டர்கள். ஆனால், அதுவும்கூட இன்றுவரை நடக்கவில்லை! அமெரிக்கத் தீர்மானம் எங்கே செயல்பட்டுக் கொண்டுள்ளது என்று திரும்பக் கேட்டீர்களா?

 

ஐ.நா.வின் உள்ளக அறிக்கையின்படியே, 6 மாத காலத்தில் சற்றொப்ப 70 ஆயிரம் தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்களே, மனித குலத்திற்கு எதிரான குற்றம் நடந்துள்ளதாக மூவர் குழு அறிக்கைக் குற்றம்சாட்டுகிறதே, அதுகுறித்தாவது ஐ.நா. விசாரித்ததா? நமக்கு நீதி கிடைத்ததா? இல்லை! ஐ.நா. மன்றம் ஏன் தலையிடவில்லை? 

 

கடந்த வாரம் நான் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. மன்றத் தலைமையகத்தைப் பார்க்கச் சென்றேன். அங்குள்ள ஒருவர் உலகில் எங்கு சிக்கல் நடந்தாலும் ஐ.நா. மன்றம் தலையிடும் என்று கூறினார். எங்கள் தமிழீழத்தில் ஐ.நா. மன்றம் தலையிடவில்லையே என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “தமிழீழச் சிக்கல் ஒரு உள்நாட்டுச் சிக்கல்” என்றார். 

 

எது உள்நாட்டுச் சிக்கல்? சூடானில் தெற்கு சூடானுக்கும் வடக்கு சூடானுக்குமான சிக்கலில் ஐ.நா. தலையிட்டு, கருத்து வாக்கெடுப்பு நடத்தி தெற்கு சூடானை தனிநாடாக்கியதே, அது உள்நாட்டுச் சிக்கல் என்று ஐ.நா. ஒதுங்கிக் கொண்டதா?  இந்தோனே சியாவில் கிழக்குத் தைமூர் சிக்கலில் தலையிட்டு, கிழக்குத் தைமூர் தனிநாடானதே அது உள்நாட்டுச் சிக்கல் என்று பார்த்தீர்களா? தமிழீழத்தில் நடைபெறுவது விடுதலைப்போர்! அது உள்நாட்டுச் சிக்கல் அல்ல!

 

வடக்கே உள்ள பல மதிக்கத்தக்க மனித உரிமைப் போராளிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. போர் நிறுத்தம்கூட கேட்க வில்லை.

 

வடநாட்டில் மட்டுமல்ல, நமக்கு பக்கத்திலே உள்ள கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஒரு சின்ன கண்டனம் கூட எழவில்லையே ஏன்? இவர்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட இனமாகத் தமிழர்கள் நாம் இருக்கிறோம்! இந்தியாவில் இனப்பாகு பாட்டுடன் நடத்தப்படுகிறோம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

 

அடுத்ததாக விக்னேசுவரன் இயற்றியத் தீர்மானம் - இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு கூட்டரசை உருவாக்க வேண்டுமென்பது! இதைக்கூட சாதிக்க முடியாத அதிகாரங்களை வைத்துக் கொண்டு, பிரபாகரன் தமிழர் மாகாண முதலமைச்சராகி இருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும் என்று பேசுவது வேடிக்கையாக இல்லையா? 
 

நான் 1991இலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குச் சென்று வருகிறேன். ஒருமுறை கனடாவில் அப்படிச் சென்றபோத, எரித்திரியா போராளிகள் வந்து சந்தித்தார்கள். இப்போது அவர்கள் தனிநாடு பெற்றுவிட்டார்கள்.

 

இதுபோல், உலகெங்கும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னாட்டு அரசியல் சூழலில் மாற்றங்கள் வரும்போது, பல  புதிய நாடுகள் பிறக்கத்தான் போகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வலுவான அமைப்பும், ஆற்றல்மிக்க அரசியல் உத்தியும்தான் இன்றைக்குத் தேவை!

 

தமிழினம் உலகின் பெருமை மிக்க இனம்! நாம் மீண்டும் எழுவோம்! தமிழீழம் பிறக்கும்! நம் மாவீரர்களின் கனவு பலிக்கும்! மாவீரர்களே, நீங்கள் காட்டிய வெளிச்சத்தில் இது நடக்கும்! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!”. இவ்வாறு பெ. மணியரசன் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'கர்நாடகத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்'-பெ.மணியரசன் பேட்டி

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

தமிழ்த் தேசிய பேரியக்க மாநில தலைவர் பெ.மணியரசன் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மேட்டூர் அணையில் நீர்மட்டம் 77 அடி குறைந்துள்ளது வேதனையாக உள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய 31.24 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. கர்நாடகம் தங்களுக்கு நீர் போதவில்லை கூறுகின்றனர். தற்போது அளவில் உள்ள நீர் விகிதாசார அடிப்படையிலாவது நீர் திறந்து விடப்பட வேண்டும், எனவே தமிழக அரசு கர்நாடகத்திற்கு வல்லுநர் குழுவை அனுப்பி இருக்கின்ற நீரை பகிரக் கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர் பாழாகி உள்ளது. தோழமை கட்சியான காங்கிரஸை, திமுக கர்நாடக அரசிடம் பேசி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகத்துக்கு எதிராகப் பொருளாதார தடையை தமிழக அரசு விதிக்க வேண்டும்.

 

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணைய தலைவர் ஹல்தர் அணை கட்ட கர்நாடக அரசின் ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான திட்ட அறிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் துறைக்கும், காவிரி நிதி நீர் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயரளவிற்கு டெல்லி சென்று மனு அளித்து வந்துள்ளார். கடந்த காலங்களில் கர்நாடக அரசு பல அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை தடுத்துள்ளது. தற்போது 66 டிஎம்சி அளவிலான மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராது, காவிரி பாலைவனமாக மாறிவிடும். அதைத் தடுக்க காவிரி பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்தி தமிழக அரசு தடை பெற வேண்டும்.

 

பொது சிவில் சட்டத்தை, பாஜக அரசு கொண்டு வருவதால் அச்சம் உள்ளது. இந்துக்களை ஒன்றாகத் திரட்டும் தந்திரமாகத் தெரிகிறது. சட்டம் குறித்து முழு விவரம் தெரிவிக்காமல் மக்களிடையே கருத்து கேட்பது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. திருமண வயது, திருமண முறிவு, வாரிசுரிமை போன்றவற்றில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவைதான், எனவே பாஜக அரசு சட்டம் பற்றிய முன்மொழிவுகளை மக்கன் முன் விவாதத்தற்கு முன் வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அச்சட்டத்தை ஏற்க விரும்புவோர் ஏற்றுச் செயல்படுத்தலாம். ஏற்க விரும்பாதோர் அவர்களின் மத வழக்கப்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என விருப்பத் தேர்வு உரிமை இருக்க வேண்டும்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதை விட, அவரது ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி, சுவிஸ், கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் கூட்டாட்சிய மைய அரசுக்கு இல்லை. எனவே சமத்துவமான மாநில உரிமைகளைக் கொண்ட உண்மையான கூட்டாட்சியாக மாற்ற புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவிற்கு தேவை. மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முழுவதும் பரப்புரையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம்'' என்றார்.

 

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், துணைப் பொதுச்செயலாளர் க.அருண்பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி போராட்டம் - பெ. மணியரசன் அறிவிப்பு!   

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Struggle to nationalize Isha Foundation-P. Maniyarasan announcement!

 

"ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.

 

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சத்தியபாமா (நிறுவனர் - சத்தியபாமா அறக்கட்டளை), வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் (சென்னை உயர் நீதிமன்றம்), மோகனசுந்தரம் சுவாமிகள் (திருவில்லிப்புத்தூர் தெய்வத்தமிழ் ஆன்மீகர்), இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல், குடந்தை), கலையரசி நடராசன் (தலைவர், சைவத் தமிழ்ப் பேரவை, ஆவடி), வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் (கரூர் சித்தர் ஆன்மிகக் கூட்டமைப்பு), ஆசீவக சுடரொளி (ஆசீவகம் – சமய நிறுவனம்), பொன்னுச்சாமி அடிகளார் (தேனி மாவட்டம்), கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்), அரங்கநாதன் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் - 1

 

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா அறக்கட்டளையும், அவ்வளாகத்தில் உள்ள இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி - திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.

 

ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டு வழிபாடு நடக்கும் தியான லிங்கம் கோயில் மற்றும் ஆதியோகி என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை ஆகியவை இந்து மற்றும் சைவ நெறிகளுக்கும், ஆகம விதிகளுக்கும் புறம்பான வகையில் அமைந்திருக்கின்றன.

 

இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu - Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தது.

 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.

 

தமிழ்நாடு அரசு, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை உரிய மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவற்றை ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

 

இவை தவிர, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” (Cauvery Calling) என்ற பெயரால் நிதித் திரட்டியதில் மோசடி நடந்திருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது (Writ Petition No 43414/2019 (GM-PIL)).

 

இவ்வாறு பலவாறான சமய நெறி மீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் - 2

 

இந்து அறநிலைத்துறையைக் கலைக்கும் ஜக்கி வாசுதேவின் முயற்சிக்குக் கண்டனம்!

 

ஜக்கி வாசுதேவும் வேறு சில ஆதிக்க சக்திகளும் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக்கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் நிர்வாகங்களிடம் அனுமதி பெறாமல், அத்துமீறி (Trespass) திருக்கோயில்களின் சன்னிதானங்களுக்கு முன்பாக ஆண்கள் – பெண்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள்ளார் ஜக்கி வாசுதேவ். இது சட்டவிரோதச் செயல்!

 

ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

சற்றொப்ப நூறாண்டுகளாக இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தின் தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் அதன் பன்மைத்தன்மை ஆகும். பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களை நிர்வாகம் செய்ய தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை மிகமிகத் தேவை.

 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத் துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும்.

 

எனவே, தமிழ்நாட்டு இந்து மக்கள் அனைவரும் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்று தெய்வத் தமிழ்ப் பேரவை கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் - 3

 

தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்!

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் விதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அன்றாடப் பூசைகளும், வழிபாடுகளும் தமிழ்வழியில் நடைபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தாலும், அதற்குரிய மந்திர நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கோயில்களில் அன்றாட பூசைகள் தமிழ் வழியில் நடத்தப்படுவதில்லை.

 

இந்த விதிமீறல் தொடரக் கூடாது எனத் தமிழ்நாடு அரசைத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. சமற்கிருதத்தில் பூசை நடத்த வேண்டுமெனக் கோருவோரைத் தவிர, இயல்பாக நடக்கும் அனைத்துப் பூசை மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவதை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடைமுறை வழக்கமாக்கிட உறுதி செய்ய வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

 

உண்ணாப்போராட்டம்

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆன்மிகர்கள் - அடியார்கள் - தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்புடன் - தஞ்சையில் வரும் 08.05.2021 – சனிக்கிழமை நாளன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை - கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி, ஒருநாள் வேண்டுகோள் உண்ணாப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.