Skip to main content

தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு... மூச்சுத் திணறலுடன் 8 நோயாளிகள் காத்திருப்பு!!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

govt hospital

 

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவத்துறை டீனிடம் விளக்கம் கேட்டுள்ளனர். வேலூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பேசுபொருளானது.

 

இந்நிலையில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை பெற வந்த 8 நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தாம்பரம் அரசு மருத்துவமனையில் பாதிப்பு அதிகரித்தால் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர். ஆனால் தற்பொழுது அங்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகக் கூறி 8 நோயாளிகளை அனுமதிக்க மறுத்துள்ளனர். தற்பொழுது அனுமதி மறுக்கப்பட்ட 8 நோயாளிகளும் மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாததால் மூச்சுத் திணறலுடன் ஆம்புலன்ஸ்காகக் காத்திருக்கின்றனர். அதேபோல் செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் 30 நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நோயாளிகள் முதலுதவி மட்டும் செய்துகொண்டு வேறுசில மருத்துவமனைகளுக்குச் சென்றுவிட்டனர்.

 

இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் வேகன்கள் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் ஏற்கனவே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "அவசரத் தேவைகளின் போது அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான். மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்குத் திருப்பி விடப்படுகின்றன" என்று கூறினார். இருப்பினும் மத்திய அரசின் இந்தச் செயல் மாநில அரசிற்கு அதிருப்தியைத் தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.