
சங்ககிரி அருகே தனியார் பேருந்து ஒன்று நடு சாலையில் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதில் பேருந்து சாலையில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த சிறிது நேரத்திலேயே பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. பேருந்தில் பயணித்த 30 க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியே குதித்தனர். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக பற்றி எரிந்தது. தற்பொழுது தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சங்ககிரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.