Skip to main content

நிரம்பி வழியும் நீர் நிலைகள்... 'ரெட் அலர்ட்' வாபஸ்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

 Overflowing water levels ... 'Red Alert' back

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துவருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகாலை 3 - 4 மணி அளவிலிருந்து புதுச்சேரி - சென்னை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாகக் கரையைக் கடந்துவருகிறது. இதனால் அதிகபட்சமாகப் புதுச்சேரியில் 19 சென்டிமீட்டர் மழையும், கடலூரில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவானதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்து சிவப்பு எச்சரிக்கைகளையும் வாபஸ் பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேவேளையில் இன்று (19.11.2021) ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிக்க, ஆற்றைக் கடக்க, துணி துவைக்க, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல என எதற்கும் ஆற்று பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால் குடியாத்தம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சாலமேடு - திருப்பாச்சனூர் இடையே செல்லும் தரைப் பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாராயணபுரம் அருகே கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காளகஸ்தி சாலை மூடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள அணைக்கட்டு தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது. அணைக்கட்டு தடுப்பணைக்கு வரும் 98.154 கனஅடி தண்ணீர் அப்படியே பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கனஅடியாக குறைந்துள்ளது. 3,500  கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீர் வரத்து 2,700 கனஅடியாக உள்ளதால் நீர் திறப்பு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புழல் ஏரியில் நீர் திறப்பு 2,500 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளும் பயன்பாட்டில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.