Skip to main content

“எங்கள் தேவை இரக்கம் அல்ல; உரிமைகள்..” - கிரேஸ் பானு

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

இனம், நிறம், பாலினம், மொழி, மதம் என எந்தவித வேறுபாடுமின்றி ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழ்வது அவசியம் என்பதை உணர்த்தவே மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. அம்மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 

 

அப்படி அதேநாளில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியும், சமூக செயற்பாட்டுக் குழுவைத் தோற்றுவித்தவருமான கிரேஸ் பானு, மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு உரிமையைக் கேட்டுப் பல்வேறு அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 

மூன்றாம் பாலினத்தவரும் மற்றவர்களுக்கு சரிசமமாகப் பயணிக்க கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் இடஒதுக்கீடு அவசியமாகிறது. ஒவ்வொரு திருநங்கையும், மருத்துவம் படிப்பதாக இருந்தாலும், அரசுப் பணியில் சேர்வதாக இருந்தாலும் அவர்கள் அதனை அடைவதற்கு தனித்தனியே போராட வேண்டியதாக இருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். 

 

2014ஆம் ஆண்டு நல்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு கிடைமட்ட இடஒதுக்கீட்டை வழங்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க முயற்சித்துவருகிறது. இதை முன்வைத்தே அனைத்து தலைவர்களுடனான சந்திப்பும் நிகழ்ந்துவருகிறதாம்.

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

இதுகுறித்து பேசிய திருங்கை கிரேஸ்பானு, “எங்கள் தேவை பெரும்பான்மை சமூகத்தினரின் இரக்கம் அல்ல; அரசியல் அமைப்பால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள் மட்டுமே. இங்குள்ள அனைத்து  மாற்றுப்பாலினத்தவரும் ஓ.பி.சி. அல்ல, சாதிய ரீதியாக ஒதுக்கப்படுவதோடு சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டுள்ளோம். மாற்று பாலினத்தவரின் பங்களிப்பையும், பாதுகாப்பையும் அனைத்து இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் குரலாக உள்ளது. 

 

அதன்படிதான் எங்களுக்கான போராட்டக் களத்திலும் எங்கள் மீது அக்கறையாக உள்ள தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கையை வைத்துவருகிறோம். அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார், கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன்,  காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்டவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

அதேபோல, பி.எஸ்.பி. எம்.பி.யான ராம்ஜி கெளதம், கேரள, மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில எம்.பி.கள் என மொத்தமாக 12 பேரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும், ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளோம். அவர்கள் மூலமாக இக்கூட்டத்தொடரில் பேசப்பட்டு எங்களுக்கான நியதியை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையோடு இந்தக் களத்தில் பயணிக்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.