ADVERTISEMENT

ஒட்டப்பிடாரம்; தி.மு.க.அலையில் மீளுவாரா கிருஷ்ணசாமி..?

03:42 PM Nov 11, 2018 | nagendran

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை காட்ட முண்டாசு கட்டி வருகின்றன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை 20-20 என்பது அஜென்டா. அதற்காக எந்த லெவல் வரைக்கும் இறங்கி வேலை பார்ப்பதிலும், வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறது.


அ.தி.மு.க.வில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சின்னத்துரை, மாஜி எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் எப்படியாவது “சீட்” வாங்கி விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அ.ம.மு.கவை பொறுத்தவரை பதவி இழந்த சுந்தர்ராஜூவே மா.செ.வாக இருப்பதால் அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் நின்று சுந்தர்ராஜிடம் தோற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கம்பு சுற்றுவார். தி.மு.க.வும் தன்பங்கிற்கு வேட்பாளரை நிறுத்தும் என்பதால், ஒட்டப்பிடாரத்தில் 4 முனைப் போட்டி என்பது நிச்சயம்.


இந்த நிலையில், 10-11-2018 அன்று தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அதிமுகவின் நிலைப்பாடே 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். யாரை நிறுத்தினால் வெற்றியை அறுவடை செய்யலாம் என்பதற்காகத் தான் கூட்டமே நடத்தப்பட்டது. ஒட்டப்பிடாரத்தை பொறுத்தவரை ரிசர்வ் தொகுதி என்பதால், எல்லா கட்சியும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் களம் இறக்கும். எனவே, மக்கள் செல்வாக்கு, பண பலம், சாதி சப்போர்ட் இது எல்லாத்தையும் கட்சித் தலைமை கவனத்தில் கொள்ளும்” என்று எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்தமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ், தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை மிக சொற்ப வாக்குகளில் வென்றார். ஆனால், இந்த முறை களம் மாறி இருக்கிறது. அ.தி.மு.க.விலேயே 2 அணி நிற்பது அந்த அணிக்கு நல்லதல்ல என்பது, இரு அணியினருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. இதுதவிர தி.மு.க.வும் களம் இறங்கும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுவார். எனவே, ஓட்டுக்கள் 4 அணியாக பிரியும் போது, தி.மு.க.வோ அல்லது புதிய தமிழகமோ எளிதில் வெற்றி பெறும்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ‘’ஒட்டப்பிடாரத்தை பொறுத்தவரை கடந்த முறையே கிருஷ்ணசாமி வெற்றி பெற வேண்டியது. ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுவிட்டனர். இந்த முறை கண்டிப்பாக டாக்டர் ஜெயிப்பார். அ.தி.மு.க.வில் 2 அணிகள் நிற்கிறது. தி.மு.க.வும் போட்டியிடுகிறது. எனவே, கட்சியா? சமுதாயமா? என்று ஓட்டுப் போடுறவன்கிட்ட சிந்தனை தோன்றும். இந்த சிந்தனை கடைசியில் சமுதாயம் பக்கமே சாயும். எனவே எங்கள் வெற்றி உறுதி’’ என்றார்.


அ.தி.மு.க.வை பொறுத்தவரை மோகன் உள்ளூர்காரர், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகிறார். அதேபோல், சின்னத்துரையும் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் மேல்மட்ட தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரிடமும் விட்டமின் ‘ப’ இருக்கிறது. எனவே இருவரில் ஒருவர் தான் வேட்பாளர் என்று பேசப்படுகிறது. அதிலும் மாஜி மோகனுக்கு அதிக வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் போட்டி போட்டு நிற்பதால், எதற்கு பிரச்சனை என்று 3-வது நபருக்கு வாய்ப்பு கொடுக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் இருவரில் ஒருவருக்குத் தான் சீட்டு கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர் உள்ளடி வேலையில் ஈடுபடுவார் அல்லது அ.ம.மு.க.வுடன் இணைந்து செயல்படுவார். இதுவும் கட்சிக்கு சிக்கல். ஒருவேளை 2 பேரில் ஒருவர் நின்று ஜெயித்து வந்துவிட்டால், நம் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற பயமும் கடம்பூராருக்கு இருக்கிறதாம். எனவே நம்ம பேச்சை கேட்கிற மாதிரி ஒருத்தரை களம் இறக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஏனெனில், இடைத்தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர் செலவு பண்ண தேவையில்லை. கட்சித் தலைமையே செலவு செய்துவிடும் என்பதால் புதுமுக வேட்பாளருக்கு விட்டமின் ‘ப’ தேவையில்லை.


அதேபோல், எந்த விதத்திலும் எதிரணிக்கு(அ.ம.மு.க.) தொகுதியை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க பெரும் முனைப்பு காட்டி வருகிறது. தி.மு.கவை பொறுத்தவரை முழுக்க முழுக்க கட்சி செல்வாக்கை நம்பியே களம் இறங்குகிறது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் ஏற்கனவே 2 முறை வென்ற தொகுதி. எனவே போட்டி என்பது கடுமையாகத் தான் இருக்கும். பலமான தி.மு.க. அலையிலிருந்து கிருஷ்ணசாமி மீளுவாரா..? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT