other state workers

Advertisment

தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம் உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா? என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.

Advertisment

வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

வேலை வாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைப்பயணமாக சொந்த ஊர்களை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளதாகவும், வழியில் பட்டினியிலும், விபத்துகளிலும் உயிரிழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்களை அரசு அதிகாரிகள் புறக்கணித்து விட்டதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? என்பன உள்ளிட்ட விபரங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அவர்களுக்கு உரிய உணவு கூட வழங்கப்படவில்லை, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ரயில் நிலையங்களில் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

http://onelink.to/nknapp

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.