Skip to main content

தமிழகம் ஒருபோதும் இந்தியை அனுமதிக்காது; சொல்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

"தமிழகத்தில் இந்தி திணிப்பு எப்போதும் சாத்தியமில்லை, அதை ஒருபோதும் அதிமுக ஏற்காது," என்கிறார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ,எஸ்,மணியன்.

 

o.s.manian about hindi imposition

 

 

நாகப்பட்டினம் பேருந்துநிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணியன், " தமிழகம் தற்போது வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையாக மின்வெட்டு இருந்தது. மின்கம்பிகளில் தொட்டில் கட்டும் நிலை கூட நீடித்தது. தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது. தற்போது திமுக தடுமாற்றத்தில் இருக்கிறது. அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் திமுகவை தற்பொழுது வழி நடத்துகிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கவே முடியாது.

சென்னை ஆர்,கே நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்த வெற்றி என்பது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி தானே தவிர, அக்கட்சியின் தலைவருக்கோ அல்லது அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது எனவும் அதை முதல்வர் வேடிக்கை பார்க்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதையே திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக செய்கிறார். பெரியார் காட்டிய வழியில் அண்ணா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டார். அந்த அண்ணாவின் பெயரில் ஆட்சி செய்யும் அதிமுக ஒருபோதும் இந்தியை திணிக்காது. இந்தியை ஏற்காது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வகுத்துத்தந்த பாதையில் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்தி திணிப்பு சாத்தியமே இல்லை." என்றார்.

கூடியிருந்தவர்களோ, " இந்தியை எதிர்க்கிறோம்னு சொல்லுறாங்க, ஆனா அந்த கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரோ அண்ணாவோட படத்தையே எடுக்கனும் என்கிறார்கள், சிலர் அண்ணாவையோ, எம்,ஜி,ஆரையோ படமாக போடுவதில்லை, இதுல எது உண்மைன்னு புரியலையே," என முனுமுனுத்தபடி வீட்டிற்கு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தி மொழி பற்றிய கேள்வி; கோபமாய் பதிலளித்த விஜய் சேதுபதி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vijay sethupathy about hindi imposition

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

அப்போது விஜய் சேதுபதியிடம், ‘75 வருடமாக இங்கு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா..’ என்ற கேள்வியை ஒருவர் முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “இது மாதிரியான கேள்வியை அமீர்கான் வந்தபோதும் கேட்டீர்கள். எல்லா சமயத்திலும் கேட்கிறீர்கள். எதற்கு அந்த கேள்வி. என்னை போன்ற ஆட்களிடம் இந்த கேள்வி கேட்டு என்னவாகப் போகுது. இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு. கேள்வியே தப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை யாரும் இங்க தடுக்கவில்லை. எல்லாரும் படித்துக்கொண்டு தான் வருகிறார்கள். அதற்கான விளக்கம் பி.டி.ஆர் ஒரு இடத்தில் கொடுத்திருப்பார். அதை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்” என சற்று கோபமாகச் சொன்னார்.

Next Story

'கோவாவில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்' - தமிழக முதல்வர் கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 26/12/2023
 'Hindi is the official language and not the national language'; Chief minister condemns player for insulting Tamil woman

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவரால் மிரட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.  

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவர். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ’தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி பாடம் எடுக்கும் வகையில் தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல. பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சி தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.