Ornithologist Robert Kirp

இந்தியாவின் முன்னோடி பறவைகள் ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ராபர்ட் கிறப் காலமானார். நாகர்கோயிலைச் சார்ந்த கிறப், பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் ( BNHS) அறிவியலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பறவை மனிதர் முனைவர் சாலிம் அலியிடம் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் ஆய்வு பணிகளுக்கு முன்னோடியாக இருந்தவர்.

Advertisment

அழிந்து வரும் நிலையில் உள்ள பறவை இனங்களான வரகுக் கோழி ( Lesser Florican), கானல் மயில் ( Great Indian Bustard) போன்றவற்றின் வாழ்வியல், வாழ்விடங்களைக் பற்றி நுட்பமாக ஆய்வு செய்து அவற்றைக் காப்பாற்ற அவசியமான அறிவியல் தரவுகளை எடுத்துரைத்தார். பாறு கழுகுகளின் ( vulture) எண்ணிக்கை 1990களில் வெகுவாக குறைந்து போனதை மதிப்பிட இவரது ஆய்வுகள் உதவியது. அழிவில் இருந்து பாறு கழுகுகளைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இவருடைய பங்களிப்பு இருந்துள்ளது.

Advertisment

அப்பறவைகளின் அழிவுக்குக் காரணமான டைக்லோபினாக் (Diclofenac ) எனப்படும் கால்நடை வலி நிவாரணி மருந்தினை தடை செய்ய பெரு முயற்சி எடுக்கப்பட்டது. டைக்லோபினாக் தடை மட்டும் போதாது என்றும் இக்கழுகுகளின் மீதம் இருக்கும் வாழ்விடங்களை காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்."தமிழகத்தின் நீர் புலப் பறவைகள்" தமது துணைவியாரோடு அவர் இணைந்து எழுதிய மிக முக்கிய நூல் ஆகும். தன்னுடைய முதிர்ந்த வயதிலும் பறவைகளை காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் அறிவியலையும் உரக்க எடுத்துரைத்து வந்தார். இந்திய பறவையியல் வரலாற்றில் அவரின் பங்களிப்பு மகத்தானது.