சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தனது மனுவில் சுகவனேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. அர்ச்சகர் நியமனத்திற்காக இந்த அறிவிப்பில் கோரப்பட்ட விண்ணப்பம் ஆகமத்தின் அடிப்படையில் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, கடந்த 23 ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகர்களாகக் கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம். ஒருவேளை ஆகமத்தைப் பின்பற்றாத கோயில்களில் ஆகமத்தைப் படிக்காதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று உத்தரவிட்டு இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாக தான நியமிக்க வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கச் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.