ordered to Private school administrators about explain contempt of court case

Advertisment

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நூறு சதவீத கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தித்த 9 பள்ளிகளுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 70 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம். அதில் 40 சதவீத கட்டணத்தை, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வசூலிக்கலாம் எனகடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. பிறகு, முதல் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் கே.ஜெயலலிதா சார்பில் கூடுதல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், அதில் 97 நிரூபிக்கப்படவில்லை என்றும், அதில் ஒன்பது பள்ளிகள், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நூறு சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி நிர்ப்பந்தித்ததாக, பெற்றோர் தரப்பில் புகார் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு எதிராக எந்தப் புகாரும் வரவில்லை என சி.பி.எஸ்.இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, குழந்தைகளின் நலன் கருதி, பெற்றோர் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால், தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.சி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, புகார்களைப் பெற்று,அதன் அடிப்படையில் அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.இ சென்னை மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Ad

Advertisment

கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு இம்மாத இறுதியில் முடிவடைய இருப்பதால், அதை நீடிப்பது குறித்து பள்ளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப் போவதில்லை என நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.