காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நேற்று (26.06.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் உச்சநீதிமன்றத்தின், மாதாந்திர நீர் பங்கீட்டு பட்டியல் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு பாசன ஜூலை மாதத்திற்கு திறக்க வேண்டும் என்ற  பரிந்துறையை காவிரி ஒழுங்காற்று குழுவானது, காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் காணொலி வாயிலாக இன்று (27.06.2025) நடைபெற்றது.

அப்போது மழையினுடைய அளவு, பாசனத்திற்கு தேவையான நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாசனத்திற்கான நீரை உரிய நேரத்தில் திறப்பதற்கான கோரிக்கையும் இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் தண்ணீர் திறந்து விட வேண்டியது தொடர்பான  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது காவேரி ஆற்றில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு  காவேரி நீர் மேலாண்மை ஆணயமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியில் இருந்து 78 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.