
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 619லிருந்து அதிகரித்து 739 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். தமிழகத்தில் 728 பேருக்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்த 11 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,03,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 294 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 194 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் மேலும் ஒரு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 22 ஆயிரமாக உள்ள ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை 25 ஆயிரமாக அதிகரிக்கவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை செய்து கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.