ADVERTISEMENT

சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

07:11 PM Apr 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு கடந்த 24/04/2021ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.

சென்னை மாநகராட்சி உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவு காட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.

தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும் மட்டும் கலந்துகொள்ள அனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தினமும் இரவு 10 மணிக்கு இரவு நேர ஊரடங்கும் அமலில் இருக்கிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமையும் முழுநாளும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை இறைச்சி, மீன் மார்கெட்டுகளில் மக்கள் சமூக இடைவெளி இன்றி குவிகின்றனர். இதனால் இனி வரும் சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் மே 2 ஆம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் முழுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில், மே 1 ஆம் தேதியும் (சனிக்கிழமை) இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி இறைச்சிக் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT