Orange Alert for two districtsMeteorological Dept Warning

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று (15.07.2024) மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இங்கு 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்படுகிறது.

அதே சமயம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.