Skip to main content

மத்திய மந்திரி கனவில்  ஓ.பி.எஸ். மகன்!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட சிலர் போட்டியிட்டனர். இருந்தாலும் இந்த மூவருக்கும் இடையே தான் கடும் போட்டியும் நிலவி வந்தது.

 

r

 

இந்த நிலையில்தான் கடந்த 18ம் தேதி பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 11லட்சத்து 67ஆயிரத்து 174 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகளை கடந்த 23ம் தேதி தேனி அருகே உள்ள கம்மவர் கலை கல்லூரியில் எண்ணப்பட்டது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கையை காலதாமதப்படுத்தி வந்தனர்.  அப்படி இருந்தும் தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை முழுமையாக தெரிவதற்குள்ளேயே எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட ஆறு  தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 

இப்படி தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதல் ரவுண்டிலேயே 3888 ஓட்டுக்கள் ரவீந்திரநாத் பெற்று முன்னிலையில் இருந்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ரவுண்டிலும் இரண்டாயிரம், மூவாயிரம் என கூடுதலாக பெற்று வந்தார். அப்படி இருந்தும் ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடந்து வந்தது.

 

இந்தநிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு வந்து கட்சிக்காரர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகவும் உசிலம்பட்டி, பெரியகுளம், போடி தொகுதிகளில் வாக்குப் பெட்டிகள் திறந்தும், சீல் வைக்காமலும் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். அதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், மாவட்ட தேர்தல் அதிகாரியான பல்லவி பல்தேவை சந்தித்து வாக்கு எண்ணிக்கையை துரிதப்படுத்த வேண்டும். வாக்குப்பெட்டியில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு சென்றார். அதேபோல் தங்கத்தமிழ்ச்செல்வனும் திடீரென வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து வாக்கு எண்ணிக்கையை உடனே துரிதப்படுத்துங்கள். 

 

r

 

தமிழகம் முழுவதும் திமுக முன்னிலையில் வரும்போது இங்கு மட்டும் ஓபிஎஸ் மகன் எப்படி முன்னிலை வருவார். இதில் ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்று காரசாரமாக பேசிவிட்டு சென்றார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடையே சில சலசலப்பும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைவிட ரவீந்திரநாத்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்றதின் மூலம் பதிமூன்றாவது ரவுண்டிற்கு மேல் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்துவந்தார். அதன்மூலம் ரவீந்திரநாத்குமாரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இருந்தது. 

 

அதைத் தொடர்ந்து இறுதிசுற்று வரை முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார். இதில் ரவீந்திரநாத்குமார் 5லட்சத்து 708 வாக்குகளும், அதுபோல் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4 லட்சத்து 25ஆயிரத்து 370 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 42ஆயிரத்து 828 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் 75ஆயிரத்து 375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோல் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளரான ராதாகிருஷ்ணன் 16ஆயிரத்து 796 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சாகுல்அமீது 27ஆயிரத்து 664 ஓட்டுக்களும், நோட்டாவுக்கு 10ஆயிரத்து567 ஓட்டுக்களும் விழுந்துள்ளது.

 

தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் 38 தொகுதிகளில் போட்டியிட்டும் கூட 37 தொகுதிகளில் அ.தி.மு.க.  கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் ஒரே தொகுதியான தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில கடும் போராட்டத்திற்கு இடையே வெற்றி பெற்றார். இந்த விசயம் ரவீந்திரநாத்குமாருக்கு தெரியவே மாவடட செயலாளர் சையதுகான், மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடைராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாலையில் வாங்கினார்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத்குமாரும்... எனது இந்த வெற்றியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன் அதுபோல் வாக்களித்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சனைகளையும் கூடிய விரைவில்  தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்று கூறியவரிடம் தமிழகத்திலேயே நீங்கள் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்குமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மந்திரி பதவியை பற்றி கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டார்!

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.