‘ஆள் பாதி; ஆடை பாதி!’ என்ற பழமொழி, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு ரொம்பவும் பிடித்தமானது போலும். ஆம். திருமலை – திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற அமைச்சர் பெருமக்களை, அவர்கள் உடுத்தியிருந்த உடையை வைத்து எடை போடுகின்றனர். திருப்பதி கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்வதற்காக, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் சென்றனர். அப்போது, பட்டு வேட்டி அணிவதைத் தவிர்த்துவிட்டு, ஓ.பி.எஸ் மட்டும் அ.தி.மு.க கரை வேட்டி அணிந்திருந்தார்.
இந்த விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “அண்ணன் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கின்ற கட்சிப் பற்று வேறு யாருக்கு வரும்?” எனக் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். யாரையும் பார்த்த மாத்திரத்தில் எடை போடுவது - அதாவது தோற்றத்தையோ, உடையையோ வைத்து, ‘அவர் அப்படியானவர்; இவர் இப்படியானவர்’ என்று கணித்துவிட்டு விமர்சிப்பது, பலருக்கும் வாடிக்கையானதுதான். ஆனால், இது எந்த விதத்தில் சரியாகும்? பின்னாளில், அரையாடைக்கு மாறினாரே மகாத்மா காந்தி! அவரை, தோற்றத்தை வைத்து மதிப்பிட யாரால் முடியும்?