Skip to main content

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னிர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், டிடிவி தினகரன் ஆதரவு, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பிலும், எதிர் மனுதாரர்களான பேரவை செயலாளர், ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 பேர் தரப்பிலும் வாதங்கள் பிப்ரவரி 27ஆம் தேதி முடிவடைந்தன. இந்நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யும் நடைமுறை இன்று முடிவடைந்தது.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்குகளின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்