Skip to main content

பிரிந்திருப்பதை பற்றி பேசிய ஓ.பி.எஸ்; சேர்ந்திருந்தால் தான் குடும்பம் என்ற சபாநாயகர்

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

OPS Request to Minister KN Nehru in assembly

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், கேள்வி நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், “பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை உறுப்பினர் ஈஸ்வரன் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதனை அமைச்சர் எதிர்காலத்தில் சரி செய்வதாக கூறியுள்ளார். 

 

இதில், கணவர் ஒரு வார்டிலும் மனைவி ஒரு வார்டிலும் தந்தை ஒரு வார்டிலும் மகன் ஒரு வார்டிலும் இருக்கின்ற சூழ்நிலை இருக்கிறது. ஆகவே இதனையும் கவனத்தில் கொண்டு, கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே வார்டில் வாக்குப் பதிவு செய்யும்படி வழிவகை செய்ய வேண்டும். அதேபோல், ஒரு வார்டில் உள்ள பகுதிகள் அனைத்தும் அதே வார்டில் இருக்க வேண்டும். ஒரு வார்டின் சில பகுதிகள் வேறு வார்டில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக இதனையும் சரி செய்து தர வேண்டும்” என்றார். 

 

OPS Request to Minister KN Nehru in assembly

 

இதற்கு அமைச்சர் பதில் சொல்ல அழைப்பதற்கு முன்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, “கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் இருந்தால் அது பெயர் குடும்பம் இல்லையே. வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும், வார்டு மறுவரையறையில் அப்படி இருக்காது என நான் நினைக்கிறேன். குடும்பம் என்றால் சேர்ந்திருப்பது தான்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ஒரு ஊரிலே செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் இருப்பார் என்றால், இவர் ஒரு வார்டில் இருந்துகொண்டு அவரது மனைவி வேறு வார்டில் நின்று வெற்றி பெறலாம் எனும் காரணத்தினால் பிரித்து வைத்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கக் கூடாது என முன்னாள் முதலமைச்சர் கேட்டுள்ளார். 

 

OPS Request to Minister KN Nehru in assembly

 

உங்களின் (அதிமுக) காலத்தில் தான் அது உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்தீர்கள். இவற்றையெல்லாம் சீர் செய்யவே என்னுடைய துறை, ஐ.பெரியசாமியின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்து கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டதின் காரணத்தால் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே உறுப்பினர் (ஓ.பி.எஸ்.) சொன்னது நல்ல கருத்து அதனை நிச்சயம் கமிட்டியில் சொல்லி சீர் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்