O.P.S. And OPR. Property Documents Verification

Advertisment

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்கள் கொடுத்ததாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் மிலானி கொடுத்த புகாரின் பேரில் தனி கோர்ட் உத்தரவுப்படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் புகார்தாரர் பல ஆவணங்களை போலீஸாரிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் உண்மைத்தன்மை குறித்து ஓ.பி.எஸ். மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோர் பிரமாண பத்திரங்களில்தாக்கல் செய்த சொத்து விவரங்களின்உண்மைத்தன்மை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பிரமாண பத்திரங்களில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் புகார்தாரர் கொடுத்த ஆவணங்களில் உள்ள சொத்து விவரங்கள் குறித்து உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது சம்மந்தமாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் சில நிறுவனங்களிடம் ஓ.பி.எஸ். அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை கேட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு விவரங்கள் சேகரித்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கோர்ட்டில் விசாரணைக்காக மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்படும்” என்றும் கூறினர்.

Advertisment

ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ஆர். மீது போடப்பட்ட தேர்தல் வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.