Skip to main content

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!     

Published on 06/08/2019 | Edited on 06/08/2019


தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க. எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமாரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.-ன் மகனான ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. சார்பிலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலர் போட்டியிட்டனர். இதில் ரவீந்திரநாத்குமார் 78ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

o

 

இந்த நிலையில் ரவீந்திரநாத்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதியில் வாக்காளர் மிலானி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்தது தான் காரணம் என்றும், அதற்கான வீடியோ ஆதாரங்களும் ஏராளமான புகார்கள் இருந்தும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் தேனி தேர்தலை மட்டும் ரத்து செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்.


    இந்த வழக்கு நீதிபதி  எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து இருக்கிறார். இப்படி ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும் கூட  இந்த வெற்றி செல்லாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!
 

சார்ந்த செய்திகள்