திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் (திருமண மண்டபத்தில்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் கன்னிவாடி சுகாதார ஆய்வாளர் சமுதாயக் கூடத்தில் இருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் தங்க வைக்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்களும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், கன்னிவாடி பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றினால் தினசரி பல கிராமங்களில் இருந்து சிகிச்சை பெறவரும் பொதுமக்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும், அதனால் செம்பட்டி சாலையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியை கரோனா நோயாளிகளை தங்க வைக்கும் இடமாக மாற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கன்னிவாடியில் சமீபத்தில் கரோனா அதிகமாக பரவி வருகிறது அதை சுகாதார ஆய்வாளர் கண்டுகொள்ளாமல் மருத்துவ அதிகாரி போல் செயல்படுகிறார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நகரங்களைத் தொடர்ந்து கிராமப் பகுதிகளிலும் கரோனா தீவிரமாக பரவி வருவதை கண்டு கிராம மக்களும் கரோனா அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.