உலக மக்களின் வாழ்க்கையையும், உயிர்களையும் கொடூரமாக்கிய கரோனா, சுனாமி போன்று வேகமெடுத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ளவர்கள் உயிர் அச்சத்தால் தங்களின் பிறப்பு நாடுகளுக்குப் பதைபதைப்புடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வெளிநாடுகளில் கல்வி, வணிகம், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்கள் கரோனா அச்சத்தால் பிள்ளைகுட்டிகளுடன் விமானம், கப்பல் போன்றவைகளில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பலர் திரும்ப வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்ற நிலையில்தான் இலங்கையிலுள்ள இந்தியர்களும் இருக்கிறார்கள்.
அரசின் திட்டப்படி இலங்கையில் தவித்த தென்னிந்தியாவை சேர்ந்த 713 பேர்கள் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்.ஜலஷ்வா மூலம் இலங்கை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குப் புறப்பட்டனர்.
இந்தக் கப்பல் புறப்படுவதற்கு முன்னதாக கப்பலில் ஏறியவர்களை கடற்படை டாக்டர் பிரசாந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதித்தனர்.
ஆபரேஷன் சமுத்ர சேது என்று இந்த மீட்புப் பணிக்காகப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் கடற்படையின் கிழக்கு பிரிவை சேர்ந்தது. இதில் கரோனா மீட்பு பணிக்கென 11 அடுக்குகளில் சுமார் 3000 படுக்கைகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு மருந்து பொருட்களையும் உள்ளடக்கியிருந்தது. மிகமிகத் தேவையான அத்யாவசிய பொருளான வெண்டிலேட்டர் வசதியும் கொண்டது இந்த ஐ.என்.எஸ். அழைத்துவரப்பட்ட 713 பேர்களில் 693 பேர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மீதமுள்ளவர்கள் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். தமிழர்களில், வந்தவர்கள் நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களும் அடக்கம்.
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், எஸ்.பி.அருண் பாலகோபாலன், துறைமுக சபை சேர்மன் ராமசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை 9.25 க்கு பெர்த்திற்குள் வந்த ஜலஷ்வாவைக் கைதட்டி வரவேற்றனர்.
32 மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் 25 பஸ்களில் சமூக இடைவெளியுடன் அமரவைத்து உணவு குடி தண்ணீர் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களனைவரும் அந்தந்த மாவட்டங்களின் மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டு தொற்று என்றால் சிகிச்சைக்கும், நெகட்டிவ் என்றால் தனிமைப்படுத்தலும் செய்யப்படுவர் என்றார் கலெக்டர் சந்தீப் நந்தூரி. அடுத்து 7ம் தேதி மாலத்தீவிலிருந்தும், 17ம் தேதி ஈரானிலிருந்தும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வருகிறது இந்தியக் கடற்படை கப்பல்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT