Skip to main content

“கோயில் திறப்பது அர்ச்சகர் வேலை; பிரதமர் வேலை அல்ல” - கே.எஸ். அழகிரி

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Opening the temple is the priest's job, PM has no job, says KS Azhagiri

‘டெல்லியில் உரிமை கேட்டுப் போராடும் விவசாயிகளை அராஜக முறையில் அடக்க நினைக்கும் பாஜக மோடி அரசின் விவசாயிகள் விரோதச் செயலைக் கண்டித்தும் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஆதார விலையைச் சட்டமாக்க வேண்டும்.  மின்சார சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வேளாண் சட்டப் போராட்டத்தில் டெல்லியில் இறந்த 715 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கே.எம் விவசாய சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி  கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்ட நோக்கங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் மக்கீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா,  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன்,  விவசாய சங்கத் தலைவர்  ரவீந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்வாணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த  200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  கே.எஸ். அழகிரி, “அமைதியான முறையில் விவசாயிகள் ஒரு ஆண்டு போராட்டத்தை நடத்தி உலகையே வியக்க வைத்தார்கள். அதன் அடிப்படையில் 3 அவசர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார் மோடி. அப்போது கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து விவசாயிகள் மீண்டும் வந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினாலும் காந்திய வழியில் போராடி வருகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் சாதாரண விஷயம் தான். வேளாண் விளைப் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சாமிநாதன் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான். இதனை மோடி அரசு பொருட்படுத்தாமல் விவசாயிகளை வீதியில் போராட வைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக ஆதார விலை மற்றும் சாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். ஆனால் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த மோடியால் உறுதி அளிக்க முடியவில்லை.

டெல்லியில் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். அவர்களை பார்க்காமல் மோடி அபுதாபியில் நாராயண் கோயிலை திறந்து வைக்க போயிருக்கிறார். கோயில் திறப்பது அர்ச்சகர் வேலை அது பிரதமர் வேலை அல்ல.  வீடு கிரகப் பிரவேசம் செய்வது போல், மோடி ஊர் ஊரா கோயில் கிரகப் பிரவேசம் செய்து வைக்கிறார். இது பிரதமருக்கு அழகு அல்ல. விவசாயிகளை வன்முறையாளர்களாகவோ, போராட்டக்காரர்களாகவோ அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியோ, கண்ணீர் புகை குண்டையோ பயன்படுத்துவது தவறு இதனை மோடி உணர வேண்டும்.  

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி உள்ளார்கள். வங்கி கணக்கை முடக்கி காங்கிரஸ் கட்சியை அழிக்கலாம் என மோடி முடிவு செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம், வன்முறை நடைபெற்று வருகிறது. ராணுவ தளத்தில் இருந்து எடுத்துச் சென்ற 3 ஆயிரம் துப்பாக்கிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார கும்பலிடம் உள்ளது. அதனை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பத்திரம் ரத்து என்ற மகத்தான தீர்ப்பு அனைவர் மத்தியில் வரவேற்பை அளித்துள்ளது” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.