Skip to main content

பள்ளிகள் திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
nn

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கதில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2024 - 2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்