Skip to main content

காவல் நிலையத்தில் ஆன்லைன் பேமென்ட் மையம் திறப்பு; அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகள் தப்பிக்க முடியாது! 

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Opening of Online Payment Center at Salem Police Station

 

சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், ஆன்லைனில் அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த  நிலையில், தற்போது அவர்களை கண்காணிக்க சிறப்பு மையம் சேலம் நகர காவல் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, வாகனத்தில் செல்லும்போது அலைப்பேசியில் பேசிக்கொண்டே செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.     

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடனடி அபராதம் (ஸ்பாட் ஃபைன்) வசூலிக்கும் திட்டத்தில் மோசடி நடந்தது. இதையடுத்து, ஆன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் எவ்வளவு என்பதற்கான ரசீது கொடுக்கப்பட்டுவிடும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த முறையிலும் ஏராளமான வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் காவல்துறையை ஏமாற்றி வருகின்றனர். சாலை விதிகளை மீறிய வகையில் மட்டும் லட்சத்திற்கு மேற்பட்டோரிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்த நடைமுறைச் சிக்கலை போக்கும் வகையில் தற்போது, சேலம் நகர காவல் நிலையத்தில், 'மோட்டார் வாகன வழக்கு ஆன்லைன்  பேமென்ட் கண்காணிப்பு மையம்' புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.  

 

இந்த மையத்திற்கென நான்கு பெண் காவலர்கள் முழு நேரப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் 1000 வாகன ஓட்டிகளை அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அபராத நிலுவையை வசூலிப்பார்கள். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் வழக்கம்போல் ஆன்லைன் மூலம் தொகையை செலுத்தலாம் அல்லது நகர காவல் நிலையத்தில் உள்ள மையத்திற்கு வந்தும் அபராதத் தொகையை செலுத்திவிட்டுச் செல்லலாம். இவ்வாறு காவல்துறையினர் கூறினர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.